மாலை மலர் 10.11.2010
தண்டையார் பேட்டையில் சாலைகள் குண்டு குழியானதை கண்டித்து பொதுமக்கள் மறியல் சீரமைக்க மேயர் உத்தரவு
ராயபுரம், நவ. 10- தண்டையார்பேட்டை இளைய முதலி தெருவில் ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. தற்போது மழை பெய்ததால் தண்ணீர் தேங்கி போக்குவரத்துக்கு இடையூறாக மாறி விட்டது.
இந்த சாலையை சீரமைக்க கோரி 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று காலை இளையமுதலி தெரு வைத்தியநாதன் மேம் பாலம் அருகே மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்ததும் தண்டையார்பேட்டை இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்தனர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இதற்கிடையே இளைய முதலி தெருவில் குண்டும் குழியுமாக உள்ள சாலையை சென்னை மேயர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் போர்க்கால அடிப்படையில் சாலையை சீரமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை கலெக்டர் அலுவலகம் அருகில் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில தலைவர் சின்னசாமி தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் 300 பேர் பங்கேற்றனர்.
திடீரென அவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு ராஜாஜி சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர்.
இதையடுத்து உதவி கமிஷனர்கள் முருகேசன், காதர்மெய்தீன், இன்ஸ் பெக்டர்கள் பாஸ்கர், ராஜேந்திரன், சேகர்பாபு தலைமையில் போலீசார் விரைந்து சென்று விவசாயிகள் 300 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.