Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சாலை சீரமைப்பு பணிக்காக ரூ82.5 லட்சம் நிதி ஒதுக்கீடு

Print PDF

தினகரன்              11.11.2010

சாலை சீரமைப்பு பணிக்காக ரூ82.5 லட்சம் நிதி ஒதுக்கீடு

மஞ்சூர், நவ.11: மஞ்சூர் பகுதியில் ஒருங்கிணைந்த சாலைகள் உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ82.5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலை துறை அதிகாரி தெரிவித்தார்.

மஞ்சூர் பஜாரில் இட நெருக்கடி காரணமாக அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது. அரசு பஸ்கள், தனியார் வாகனங்கள் நடுரோட்டிலேயே நின்று பயணிகளை ஏற்றி, இறக்கி செல்வதால் அடிக்கடி வாகன விபத்து ஏற்படுகிறது.

பஜார் பகுதியிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள், பொது நல அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும் வலியுறுத்தி வந்தனர். நெடுஞ்சாலை துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு கடந்த ஓன்றரை ஆண்டுக்கு முன் மின் வாரிய மேல்முகாம் பகுதியில் இருந்து மஞ்சூர் பஜார், கரியமலை பிரிவு வரை சாலையின் இரு புறங்களிலும் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகள், வீடுகள் அகற்றப்பட் டன.

கடந்தாண்டு கீழ்குந்தா செல்லும் சாலையில் இருந்த ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டன. நெடுஞ்சாலை துறை நடவடிக்கை பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றது. ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட பகுதிகளில் பல மாதங்கள் ஆகியும் தடுப்பு சுவர், கழிவு நீர் கால்வாய் அமைக்காமலும், சாலை விரிவுபடுத்திட நடவடிக்கை எடுக்காததால் அனைத்து தரப்பிலும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது.

பஜார் பகுதியில் மேலும் புதிய ஆக்கிரமிப்பு தோன்றின. மஞ்சூர் பஜாரில் சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் மீண்டும் வலியுறுத்தினர். கடந்த சில தினங்களுக்கு முன் சாலையை சீரமைக்க வேண்டி திட்ட மதிப்பீடு செய்யப்பட்டது.

இதுகுறித்து நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் குழந்தைராஜ் கூறும் போது, மஞ்சூர் பகுதியில் சாலையை சீரமைக்க நெடுஞ்சாலை துறை சார்பில் ஒருங்கிணைந்த சாலைகள் உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.82.5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் குந்தா தொலை தொடர்பு அலுவலக பகுதியில் இருந்து மஞ்சூர் பஜார் வழியாக கரியமலை பிரிவு வரை சாலையின் தேவையான இடங்களில் தடுப்பு சுவர், கல்வெட்டுகள், கழிவு நீர் கால்வாய் அமைப்பதுடன் சாலை விரிவுபடுத்தி புதுப்பிக்கப்படும். இப்பணிகளை அடுத்த வாரம் துவக்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.