தினமணி 20.11.2010
ரூ.3.95 கோடியில் சாலைகள் மேம்பாடுகோவில்பட்டி
, நவ. 19: சிறப்பு சாலை மேம்பாட்டுத் திட்டம் 2010-11-ன் கீழ் கோவில்பட்டி நகராட்சி பகுதியில் ரூ.3 கோடியே 95 லட்சம் மதிப்பில் சாலைகள் அமைக்கும் பணிக்கு நகர்மன்றக் கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டது. கோவில்பட்டி நகர்மன்றத்தின் அவசரக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நகர்மன்றத் தலைவி மல்லிகா தலைமை வகித்தார். நகராட்சி ஆணையர் விஜயராகவன், துணைத் தலைவர் சந்திரமெüலி முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நடைபெற்ற விவாதங்கள்:
கவுன்சிலர் மதி (காங்.): வேலாயுதபுரம் பஸ் நிறுத்த பணிகள் நடைபெறுமா? ஆணையர்: பணி தொடங்கிய பின்பு நிறுத்தப்பட மாட்டாது.
நாகராஜன் (தி.மு.க.): துப்புரவு பணியாளர்கள் போதுமான அளவு இல்லை. நகரிலுள்ள சுமார் 12 பெரிய வாறுகால்களை சுத்தப்படுத்த ஜே.சி.பி. இயந்திரம் வாங்க வேண்டும். தவமணி (தி.மு.க.): கோவில்பட்டி நகரில் இரவில் சுற்றித்திரியும் பன்றிகளைக் கட்டுப்படுத்த வேண்டும். நகராட்சிக்கு ஜெனரேட்டர் வாங்க பலமுறை முறையிட்டும் பயனில்லை.
ஆணையர்: நிதி கிடைத்தவுடன் ஜெனரேட்டர் வாங்குவோம். பன்றிகளைக் கட்டுப்படுத்த ஏற்கெனவே நடவடிக்கை எடுத்து வருகிறோம். மேலும் துரிதப்படுத்துவோம். செல்வமணி (காங்.): பங்களாத் தெருவில் குடிநீர் சரியாக விநியோகம் செய்யப்படுவதில்லை. இதுகுறித்து, பலமுறை முறையிட்டும் எந்தவித பலனும் கிடைக்கவில்லை. பங்களாத் தெரு பகுதி குடிநீர் விநியோகத்துக்கு 6 இஞ்ச் பைப் அமைக்க வேண்டும் என்று கூறி, கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்த அவர், சிறிது நேரத்துக்கு பின் மீண்டும் கூட்டத்தில் பங்கேற்றார்.
கவுன்சிலர்கள் செல்வப்பெருமாள் (தி.மு.க.), கருணாநிதி (தி.மு.க.), தெய்வேந்திரன் (ம.தி.மு.க.), பவுன்மாரியப்பன் (ம.தி.மு.க.), ராஜேந்திரன் (ம.தி.மு.க.): தினசரி சந்தையிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். அதுபோன்று நகரில் அனுமதியின்றி கட்டடங்கள், சுவர்கள் கட்டுவோர் மீதும், இடிப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எந்தவித பாரபட்சமும் இன்றி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். நகர்மன்றத் தலைவி மல்லிகா: உறுப்பினர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் எந்தவித தயக்கமும் ஏற்படாது என்றார். இக்கூட்டத்தில் 15 தீர்மானங்களில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.