தினமணி 23.11.2010
மானாமதுரையில் ரூ. 50 லட்சத்தில் சாலைகள்: பேரூராட்சி அனுமதி
மானாமதுரை, நவ. 22: மானாமதுரையில் சிறப்புச் சாலைகள் திட்டத்தில் ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் சாலைகள் அமைக்கும் பணிக்கு பேரூராட்சிக் கூட்டத்தில் அனுமதி வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மானாமதுரை பேரூராட்சிக் கூட்டம் இதன் தலைவர் ராஜாமணி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் துணைத் தலைவர் ஜோசப்ராஜன், செயல் அலுவலர் மருது மற்றும் வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டம் தொடங்கியதும் கவுன்சிலர்களின் கேள்விகளுக்கு தலைவர், துணைத் தலைவர், செயல் அலுவலர் ஆகியோர் பதிலளித்தனர்.
இதன்பின் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
மானாமதுரையில் 2010-2011-ம் ஆண்டு சிறப்புச் சாலைகள் திட்ட நிதி ஒதுக்கீட்டில் வார்டு எண்கள் 9, 17, 13 ஆகியவற்றில் ரூ. 22.40 லட்சம் மதிப்பீட்டிலும், வார்டு எண்கள் 6, 8, 4 ஆகியவற்றில் ரூ. 22.55 லட்சம் மதிப்பீட்டிலும், சிமெண்ட் மற்றும் தார்ச் சாலைகள் அமைக்க குறைந்த தொகைக்கு ஒப்பந்தப்புள்ளி வழங்கிய ஒப்பந்ததாரர்களுக்கு பணிகளை மேற்கொள்ள மன்றக் கூட்டம் அனுமதி வழங்குகிறது என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.