தினகரன் 26.11.2010
பள்ளிபாளையத்தில் ரூ82.76 லட்சத்தில் புதிய சாலைகள்
பள்ளிபாளையம்,நவ.26. பள்ளிபாளையம் நகராட்சி பகுதியில் ரூ82.76 லட்சம் செலவில் சாலை மேம்பாட்டு பணிகள் துவங்கியுள்ளது. நகர்மன்ற தலைவர் குமார் பணிகளை துவக்கி வைத்தார். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நகராட்சி பகுதிக்குட்பட்ட சாலைகளை மேம்படுத்துவதற்காக இந்த ஆண்டு ரூ82.76 லட்சத்தை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. இந்த நிதியை கொண்டு பள்ளிபாளையம் நகராட்சியில் ஏழு இடங்களில் காங்கிரீட் சாலைகளும், இரண்டு இடங்களில் தார் சாலைகளும் அமைக்கப்படுகிறது. புதிய சாலை அமைப்பதற்கான பணிகள் பள்ளிபாளையம் நகராட்சியில் நேற்று துவங்கியது. இதற்கான துவக்க விழா நகராட்சி செயல் அலுவலர் துரைசாமி தலைமையில் நடந்தது. பூமி பூஜைக்கு பின்னர் பணிகள் துவங்கின. நகர்மன்ற தலைவர் குமார் பணிகளை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் நகர்மன்ற துணைத்தலைவர் ரவிச்சந்திரன், உறுப்பினர்கள் சுமதி, ரங்கசாமி, நகராட்சி உதவி பொறியாளர் செந்தில்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.