தினகரன் 01.12.2010
துணை முதல்வர் பேட்டி சாலைகளை சீரமைக்க ரூ1000 கோடி ஒதுக்கீடு
நாகர்கோவில், டிச. 1: குமரி மாவட்டத்தில் மாம்பழத்துறையாறு அணை திறப்புவிழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் இரவு குமரி மாவட்டம் வந்தார்.
பயனாளிகள் ஜெகன், மணிகண்டராஜன், பானுமதி ஆகியோரது வீடுகளை திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார். வீட்டு சாவிகளையும் பயனாளிகளிடம் ஒப்படைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின்கீழ் தமிழகத்தில் 21 லட்சம் வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதுவரை 3,000 வீடுகள் கட்டப்பட்டு பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 3 லட்சம் வீடுகளும் வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் கட்டி முடிக்கப்படும். இந்த திட்டத்தின்கீழ் குமரி மாவட்டத்தில் 2010&11ம் ஆண்டுக்கு 1,539 வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டு இதுவரை 580 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதர 959 வீடுகளும், டிசம்பர் மாதத்துக்குள் கட்டி முடிக்கப்பட்டுவிடும்.
தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் சாலைகளை சீரமைக்க ரூ1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சேதங்களை கணக்கெடுக்கும் பணிகள் நடந்து வருகிறது. மழை நின்றதும் விரைவில் சீரமைப்பு பணிகள் தொடங்கும். இவ்வாறு அவர் கூறினார்.