தினமணி 06.12.2010
திண்டுக்கல்லில் ரூ.2 கோடியில் சிமெண்ட் சாலைப் பணி
திண்டுக்கல், டிச. 5: திண்டுக்கல் ரவுண்டு ரோட்டில் ரூ.2 கோடி செலவில் சிமெண்ட் தளம் அமைத்தல் மற்றும் நடைபாதையில் டைல்ஸ் கற்கள் பதிக்கும் பணியை, நகர்மன்றத் தலைவர் ஆர். நடராஜன் தொடங்கி வைத்தார்.
திண்டுக்கல் நகரில் பாதாளச் சாக்கடைப் பணிகள் முடிவுற்ற பகுதிகளில், சாலைகளைப் புதுப்பிக்க அரசு நிதி ஒதுக்கியுள்ளது. அதன்படி, சிறப்பு சாலைத் திட்டம் 2010-11-ன் கீழ், வார்டு எண் 16 மற்றும் 31 ஆகியவற்றில், வடிகால், பாலம் மற்றும் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்கு ரூ.1.96 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ரவுண்ட் ரோட்டை சீரமைக்கும் பணிக்கான பூமிபூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதற்கான விழாவில், திண்டுக்கல் நகர்மன்றத் தலைவர் ஆர். நடராஜன், நகராட்சி ஆணையர் அர. லட்சுமி, வர்த்தகர் சங்கப் பிரதிநிதிகள், நடைபயில்வோர் சங்கத்தினர், நகர்மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். பின்னர், நகர்மன்றத் தலைவர் கூறுகையில், நகரில் பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகள் முடிவுற்ற பகுதிகளில், சாலைகள் மற்றும் இதர சாலைகளைப் புதுப்பிக்க, துணை முதல்வர் ரூ.12 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். இதைத் தவிர, நெடுஞ்சாலைத் துறை மூலம் ரூ.8 கோடி நிதி வரப் பெற்றுள்ளது. மொத்தம் ரூ.20 கோடி மதிப்பில் நகரில் உள்ள அனைத்து சாலைகளும் புதுப்பிக்கும் பணி தொடங்கப்படும் என்றார்.