தினமணி 07.12.2010
ரூ.8.44 கோடி சாலைப் பணிஆணை வழங்கல்
மதுரை, டிச. 6: மதுரை மாவட்டத்தில் 12 பேரூராட்சிகளில் ரூ.8.44 கோடி மதிப்பீட்டில் சிமென்ட் சாலை வசதிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக, மாவட்ட ஆட்சியர் சி. காமராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்தது.
2010-2011 -ம் ஆண்டு சிறப்புச்சாலை திட்டத்தின் கீழ், மாவட்டத்தில் உள்ள 12 பேரூராட்சிகளிலும் 33.876 கி.மீ. நீளத்தில் ரூ.8.44 கோடி மதிப்பீட்டில் 82 சிமென்ட் சாலைப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
இத்திட்டத்தில் பணிகளை மேற்கொள்ள திருநகர், ஹார்விபட்டி, பரவை, வாடிப்பட்டி, அலங்காநல்லூர், சோழவந்தான், பேரையூர், டி.கல்லுப்பட்டி, அ.வல்லாளப்பட்டி, பாலமேடு மற்றும் எழுமலை ஆகிய பேரூராட்சிகளின் செயல் அலுவலர்களிடம் பணிகளுக்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்துள்ளார் ஆட்சியர்.