Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தூத்துக்குடி மாநகராட்சி ரோடுகள் படுமோசம் துரித நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி நிர்வாகம்?

Print PDF

தினமலர்                09.12.2010

தூத்துக்குடி மாநகராட்சி ரோடுகள் படுமோசம் துரித நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி நிர்வாகம்?

தூத்துக்குடி:தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து ரோடுகளிலும் உள்ள ஆபத்தான பள்ளங்கள் மற்றும் ஆழமான குழிகளை சரி செய்ய மாநகராட்சி நிர்வாகம் துரித நடவடிக்கை எடுப்பதோடு, அனைத்து ரோடுகளையும் புதுப்பிக்க வேண்டும் என்று அகில இந்திய வர்த்தக தொழில் சங்கம் கோரிக்கைவிடுத்துள்ளது.இது குறித்து தூத்துக்குடி அகில இந்திய தொழில் சங்கத்தின் பொதுச் செயலாளர் ராஜா சங்கரலிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது; தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக நான்கு வழிபோக்குவரத்தினை கொண்ட நகரம் என்ற பெருமை தூத்துக்குடிக்கு மட்டுமே உண்டு. மேலும் தமிழக அளவில் விரைவாக வளர்ச்சி அø டந்து வரும் தொழில் நகரம் என்ற பெருமை பெற்றுள்ள தூத்துக்குடி மாநகரம் உள்கட்டமைப்பு வசதிகளில் மிகவும் மோசமான நிலையிலேயே காணப்பட்டு வருகிறது.

நகராட்சியாக இருந்த தூத்துக்குடி மாநகராட்சி அந்தஸ்து பெற்று இரண்டாண்டுகளை கடந்த விட்டபோதிலும், இன்றும் நகராட்சியாக எப்படியிருந்ததோ அதைவிட மிக மோசமான நிலையில் தான் உள்ளது. தமிழகத்திலுள்ள கிராம பஞ்சாயத்துக்களில் உள்ள ரோடுகள் எல்லாம் சிமெண்ட் ரோடாக மாற்றியமைக்கப்பட்ட நிலையில், மாநகராட்சி அந்தஸ்தில் உள்ள தூத்துக்குடியில் மட்டும் ரோடுகள் எல்லாம் மிகவும் மோசமான நிலையில் காட்சியளித்து வருகிறது. மாநகராட்சியில் பாதாள சாக்கடைத் திட்டத்திற்கான பணிகள் தொடங்கப்பட்டு பல மாதங்கள் ஆன பிறகும் அந்த பணி இழுத்துக் கொ ண்டே போகிறதே தவிர, எந்த இடத்திலும் முழுமையாக இன்னமும் நிறைவு பெற்றதாக தெரியவில்லை. மாநகர் பகுதிக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் பாதாள சாக்கடைத்திட்டம் என்ற போர்வையில் ரோடுகள் தோண்டப்பட்டு குண்டும், குழியுமாகவே காட்சியளித்து வருகிறது. இதனால் தூத்துக்குடியில் எந்த பக்கம் போனாலும் உடைந்து மோசமான ரோடுகளாகத் தான் காட்சி அளிக்கிறது.

தூத்துக்குடியில் மேற்கு கிரேட் காட்டன் ரோடு மற்றும் விக்டோரியா ரோடு முக்கியமானவையாகும். மாநகரின் மையமானப் பகுதியில் அமைந்துள்ள இந்த இரண்டு பிராதன சாலையில் தான் முக்கிய வணிக நிறுவனங்கள், ஷிப்பிங் ஏஜெண்சிகள் போன்றவை செயல்பட்டு வருகிறது. இதனால் இந்த ரோடுகளில் அதிகாலை முதல் இரவு வரை போக்குவரத்து நெருக்கடியுடன் காணப்படும். மாநகரின் நீளமான ரோடாக அமைந்துள்ள விக்டோரியா ரோட்டில் அந்தோணியார் ஆலயம், வஉசி., காய்கறி மார்க்கெட், டிஎம்பி.,தலைமை அலுவலகம், ஹோலிகிராஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பிரபல தனியார் ஹோட்டல்கள், திருமண மண்டபங்கள், சினிமா தியேட்டர் என பல உள்ளன. இந்த ரோட்டில் இருந்து பல முக்கிய பகுதிகளுக்கு செல்லும் பிரதான சலைகளும் பிரிந்து செல்கிறது. பரபரப்பாக செயல்படும் விக்டோரியா ரோட்டின் நிலைமை தற்போது மிகவும் மோசமான நிலையில் காட்சியளிக்கிறது. பாதாளச்சாக்கடை திட்டத்திற்காக தோண்டப்பட்ட அந்த ரோடு சரிவர போடப்படாததால் மரணக்குழியாக பல இடங்களில்காட்சி அளித்து வருகிறது. இதேபோல் தூத்துக்குடி அகில இந்திய வர்த்தக தொழில் சங்கம் தெற்கு ராஜா தெருவில் செயல்பட்டு வருகிறது.

இந்த தெருவில் தான் இந்திய வர்த்தக தொழில் சங்கம், ஏற்றுமதி மற்றும் இறக்குமதியாளர்கள் சங்கம், தூத்துக்குடி பருப்பு வியாபாரிகள் சங்கம் மற்றும் பல வணிக நிறுவனங்கள் மற்றும் அலாய்சியஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பிரான்சிஸ் சேவியர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி போன்றவை அமைந்துள்ளன. அப்படிப்பட்ட இந்த தெருவில் தொடர் மழை பெய்தால் மழைநீரும் கழிவு நீரும் சேர்ந்து குளம் போல் காட்சி அளித்து வருகிறது. சிறப்பான முறையில் வணிகம் செயல்பட்டு வரும் நிலையில், மோசமான நிலையில் காணப்படும் ரோட்டினால் பல இடையூறுகள் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலைமையை சீர் செய்யும் வகையில் சாக்கடை கழிவுநீர் மழைநேரம் வெளியே வராமல் தடுக்க சிமெண்ட் பிளேட்டுகளால் மூடவேண்டும். தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் பாதாளசாக்கடை திட்டங்களை விரைவில் முடித்து நகரில் உள்ள அனைத்து ரோடுகளையும் போர்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும். மேலும் தூத்துக்குடியில் இருக்கும் பிரதான இரண்டு முக்கிய சாலைகளில் ஒன்றான வி.இ., ரோட்டையாவது தற்காலிகமாக விபத்தில்லாமல் வாகனங்கள் சென்று வர சீரமைக்க வேண்டும் என்று அகில இந்திய வர்த்தக தொழிற்சங்கத்தின் பொதுச் செயலாளர் ராஜா சங்கரலிங்கம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.