தினமலர் 10.12.2010
தென்காசியில் ரூ.3.51 கோடியில் சாலை சீரமைப்பு பணி துவக்கம்
தென்காசி : தென்காசி நகராட்சி பகுதியில் 3 கோடியே 51 லட்சம் ரூபாய் செலவில் சாலைகள் சீரமைக்கும் பணி துவங்கியது.
தென்காசி நகராட்சி பகுதியில் 33 வார்டுகள் உள்ளன. வார்டுகளில் உள்ள பெரும்பான்மையான சாலைகள் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகன போக்குவரத்திற்கு பெரிதும் இடையூறாக இருக்கிறது. மழைக் காலங்களில் சாலைகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது.
சீர்குலைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர். இதனை நகராட்சி தலைவர் கோமதிநாயகமும் ஏற்றுக் கொண்டு சாலைகளை சீரமைக்க அரசிடம் நிதியுதவி பெறுவது என தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பப்பட்டது.
அரசும் இதனை ஏற்றுக் கொண்டு தென்காசி நகராட்சி பகுதியில் உள்ள சாலைகளை சீரமைக்க 3 கோடியே 51 லட்சம் அனுமதி அளித்தது. இதனையடுத்து நகராட்சி பகுதியில் சாலைகள் சீரமைக்கும் பணி துவங்கியது. நேற்று தைக்கா தெரு, போலீஸ் காலனி பகுதியில் சாலைகள் சீரமைக்கும் பணியை நகராட்சி தலைவர் கோமதிநாயகம் துவக்கி வைத்தார்.
நகராட்சி கமிஷனர் செழியன், இன்ஜினியர் ராமலிங்கம் முன்னிலை வகித்தனர். நவாஸ், தி.மு.க.வட்ட செயலாளர் மோகன்ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். தைக்கா தெரு, போலீஸ் காலனி, ரயில்வே ரோடு உள்ளிட்ட சாலைகள் மட்டும் சீரமைக்க 20 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.