தினமலர் 10.12.2010
ரூ.4 கோடிக்கு ரோடு; தீர்மானம் "பாஸ்'
திருப்பூர்:நல்லூர் நகராட்சி அவசர கூட்டம் நேற்று நடந்தது; தலைவர் விஜயலட்சுமி தலைமை வகித்தார். செயல் அலுவலர் (பொறுப்பு) குற்றாலிங்கம் முன்னிலை வகித்தார். சிறப்பு சாலை திட்டத்தில் செய்யப்படும் நான்கு கோடி ரூபாய் மதிப்புள்ள பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளி மீதான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.கூட்ட விவாதம்:விஜயகுமார் (அ.தி.மு.க.,): ஒப்பந்தப்புள்ளி கூடுதலாக உள்ளது. ஒப்பந்த தொகைக்கு மூன்று சதவீதத்துக்கு குறைவாக, பல்லடம் நகராட்சியில் டெண்டர் விடப்பட்டுள்ளது. நல்லூரில் 4.97 சதவீதம் அதிகமாக உள்ளதால், நகராட்சிக்கு கூடுதலாக 20 லட்சம், மூன்று சதவீதம் குறைக்காமல் 12 லட்சம் என 32 லட்சம் நஷ்டம். இதர நகராட்சியில் செய்யும்போது, நல்லூரில் ஏன் செய்ய முடியாது? நகராட்சி பொது நிதியை ஒதுக்கினால், இதர பணி பாதிக்கப்படும். செவந்தாம்பாளையம் ஓடைக்கு உரிய தீர்வு காண வேண்டும்.
குப்பை தொட்டி அதிகமாக தேவைப்படுகிறது.நாகராஜ் (தி.மு.க.,): சத்தியமூர்த்தி நகர், கவுதம் நகரில் பொது குடிநீர் குழாய் அமைக்க வேண்டும். தெருவிளக்கு பிரச்னை தொடர்கிறது. ராக்கியாபாளையம் பிரிவு, மணியகாரம்பாளையம் ரோட்டில் உள்ள டிரான்ஸ்பார்மர், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது.பத்திரன் (தி.மு.க.,): வி.ஜி.வி., கார்டனில் ஒரு மோட்டார் மட்டும் இருக்கிறது. 500 வீடுகளுக்கு தண்ணீர் சப்ளை செய்ய முடியவில்லை. கூடுதலாக இரண்டு மோட்டார் தேவைப்படுகிறது.சுப்ரமணியம் (மா.கம்யூ.,): அனைத்து வார்டுகளிலும் முட்செடிகள் முளைத்துள்ளன. அவற்றை அகற்ற, தனித்திட்டம் தேவை. வடிகாலை தூய்மைபடுவத்துவதில்லை.
குப்பை கொட்டும் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.நகராட்சி தலைவர் மற்றும் செயல் அலுவலர் அளித்த பதில்: செங்கல், சிமென்ட் என கட்டுமான பொருட்களின் விலை உயர்வால், டெண்டர் மதிப்பு அதிகமாகியுள்ளது. தெருவிளக்கு பிரச்னை உள்ளிட்ட மின் பிரச்னைக்கு, மின்வாரியத்திடம் பேசப்படும். நகராட்சி முழுவதும் முட்செடி அகற்றப்படும். வடிகாலை தூய்மைப்படுத்த, கூடுதலாக சுயஉதவிக்குழுவினர் நியமிக்கப்பட உள்ளனர். மாநகராட்சியோடு இணைய உள்ளதால், வேலம்பாளையம், நல்லூர் நகராட்சியில் சேகரமாகும் குப்பை பிரச்னைக்கு, மாநகராட்சியோடு இணைந்து திட்டம் செயல்படுத்தப்படும், என்றனர்.