தினகரன் 14.12.2010
விருதுநகரில் 24 கிமீ சாலைகள் சீரமைப்பிற்கு ரூ.9 கோடி ஒதுக்கீடு
விருதுநகர், டிச. 14: விருதுநகர் நகராட்சி பகுதியில் 24.40 கி.மீ சாலைகளை சீரமைக்க சிறப்பு சாலைகள் திட்டத்தின் கீழ் ரூ.9 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அனைத்து நகராட்சிகளிலும் சாலைகளை மேம்படுத்த ரூ.ஆயிரம் கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. விருதுநகர் நகராட்சி பகுதியில் பாதாளச்சாக்கடை திட்டம் நடந்து வந்ததால் அனைத்து சாலைகளும் குண்டும் குழியுமாக மாறிவிட்டன. திட்டம் நிறைவேற்றப்பட்ட ராமமூர்த்தி சாலை, மல்லாங்கிணறு சாலை, படேல் சாலைகளில் அமைக்கப்பட்ட சாலைகள் ஒரு ஆண்டிற்குள் குண்டும், குழியுமாக மாறிவிட்டன.
தமிழக அரசின் சிறப்பு சாலை நிதி ஒதுக்கீட்டின்கீழ் விருதுநகர் நகராட்சிக்கு ரூ.9 கோடி நிதி வழங்கப்படுகிறது. இந்த நிதி மூலம் பாவாலி ரோடு, பி2, பி2 ரோடு, சர்ச் ரோடு, மீனாம்பிகை ரோடு, புல்லலக்கோட்டை ரோடு,. அகமது நகர், போலீஸ்பாலம் ரோடு, மேலரத வீதி, தெற்கு ரதவீதி, புளுகானுரணி ரோடு, பழைய பஸ் ஸ்டாண்ட் சுற்றுச்சாலைகள் சீரமைக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
விருதுநகர் பகுதியில் அமைக்கப்படும் சாலைகள் அனைத்தும் தரமற்றதாக அமைப்பதால் சில மாதத்திற்குள் குண்டும், குழியுமாக மாறிவிடுகிறது. இதனால் விருதுநகருக்கு அரசு ஒதுக்கும் நிதி வீணாகிறது. புதிதாக அமைக்கப்படும் சாலைகள் குறைந்தபட்சம் 3 ஆண்டுகளுக்கு சேதமடையாமல் இருக்கும்வகையில் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்