தினகரன் 14.12.2010
தர்மபுரி நகராட்சி 3 வார்டுகளில் ரூ43 லட்சம் மதிப்பீட்டில் சாலை
தர்மபுரி, டிச.14: தர்மபுரியில் மழை பெய்தால், 9 வார்டு மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். மழைக்காலங்களில் அரசு மருத்துவமனை, முகமதுஅலி கிளப்சாலை, கந்தசாமி வாத்தியார் தெரு ஆகிய பகுதிகளில் இருந்து தண்ணீர் வடிந்து 8, 9வது வார்டில் உள்ள கால்வாய் வழியாக செல்கிறது. அங்கு உள்ள சாக்கடை கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் குடியிருப்புப்புகளுக்குள் தண்ணீர் புகுந்துவிடுகின்றன. இதனால் அந்தபகுதி சாலை சேரும், சகதியுமாக மாறிவிட்டது. இதைதொடர்ந்து அப்பகுதி மக்களின் தினசரி வாழ்க்கை பெரும்அளவில் பாதிக்கப்படுகிறது.
எனவே சாக்கடை கால்வாயில் கழிவுநீர் அடைப்பின்றி செல்ல, ஆவின் பால்பண்ணை அருகே சிறுபாலம் உயர்த்தி அமைத்து, தார்சாலை அமைத்து தரவேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில் அரசு ரூ19 லட்சத்தில் சாலை அமைத்து சிறுபாலம் உயர்த்தி கட்ட நகராட்சிக்கு உத்தரவிட்டது. அதன்படி நேற்றுமுன்தினம் சாலைப்பணிகளுக்கான பூமிபூஜை போடப்பட்டது. இதுபோன்று ஜி.எம்.தியேட்டர் அருகில் ரூ19லட்சத்தில் சிமென்ட் சாலையும், எஸ்.வி.ரோட்டில் ரூ5லட்சத்தில் தார்சாலையும் போடுவதற்கு பூமிபூஜை செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சிகளில் நகரமன்ற உறுப்பினர்கள் நாட்டான் மாது, சந்திரமோகன், தகடூர் வேணு கோபால், மாது, எழிலரசு, சுமதி, நகராட்சி அலுவலர்கள் சரவணபாபு, முத்துக்குமார், ஒப்பந்ததாரர் இக்பால் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து நகரமன்றத்தலைவர் ஆனந்தகுமார்ராஜா கூறும்போது, தர்மபுரி நகராட்சியில் சாலை மேம்பாட்டிற்காக ரூ5.5கோடிநிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் 9வது வார்டில் சாலைவசதியும், 30&வது வார்டில் சிமென்ட் சாலையும், 21&வது வார்டில் சாலையும் போடப்படுகிறது. அதற்கான மதிப்பு ரூ43 லட்சம் என்று கூறினார்.