தினகரன் 15.12.2010
உடன்குடி பகுதியில் சிமென்ட் சாலை அமைக்க ரூ.48.30 லட்சம் ஒதுக்கீடு
உடன்குடி, டிச. 15: உடன்குடி பேரூராட்சித்தலைவர் சாகுல்ஹமீது வெளியிட்டுள்ள அறிக்கை:
நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் ஆயிரம் கோடி ரூபாய் செலவில், புதிய சாலைகள் அமைக்கப்படும் என்று முதல்வர் அறிவித்து இருந்தார். அதன்படி சிறப்பு சாலைகள் திட்டத்தில் உடன்குடி பேரூராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில் புதிய சிமென்ட் சாலைகள் அமைப்பதற்கு ரூ.48.30 லட்சம் நிதியை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.இந்த நிதியில் இருந்து ரூ.14.80 லட்சத்தில் புதுமனை சமத்துவபுரம், ரூ.9.40 லட்சத்தில் வைத்திலிங்கபுரம், ரூ.8.25 லட்சத்தில் மானங்காத்த அய்யனார் கோயில் சாலை, ரூ.7 லட்சத்தில் சாதரக்கோன்விளை வடக்கு மற்றும் தெற்கு தெரு, ரூ.4.30 லட்சத்தில் சைவப்பிரகாசவித்தியாசாலை தெரு, ரூ.3.25 லட்சத்தில் நடுக்கடை காலனி, ரூ.1.30 லட்சத்தில் பரதர் தெரு ஆகிய இடங்களில் புதிய சிமென்ட் சாலைகள் அமைக்கப்பட உள்ளன.
12வது நிதிக்குழு மானிய திட்டத்தில் ரூ.7 லட்சம் நிதி கிடைக்கப்பெற்று, புதுமனை உரக்களஞ்சியத்தில் சுற்றுசுவர் கட்டப்பட்டதோடு, சலவைத் தொழிலாளர் குடியிருப்பு தெரு, வடக்கு புதுத்தெரு சந்து, கிறிஸ்தியாநகரம் வடக்கு&தெற்கு தெரு சந்துகள் ஆகிய இடங்களில் பழுதடைந்த சிமென்ட் சாலைகள் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு சீர் செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே ரூ.50.82 லட்சம் செலவில் நபார்டு திட்டத்தில் நகரில் பல்வேறு பகுதிகளில் புதிய தார்ச்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.