தினகரன் 15.12.2010
ரூ33 கோடியில் சாலை சீரமைப்பு துவங்கியது
மதுரை, டிச. 15: மதுரையில் ரூ.33 கோடியில் சாலை சீரமைப்பு பணி பூமி பூஜையுடன் துவங்கியது. மதுரை நகரில் சாலைகள் சீரமைப்புக்கு தமிழகஅரசு ரூ.33கோடியே 40லட்சம் வழங்கி உள்ளது. இதன் மூலம் 114 கிமீ நீளம் மொத்தம் 117 சாலைகள் புதுப்பிக்க மாநகராட்சி ஆணையாளர் செபாஸ்டின் உத்தரவு வழங்கினார். நேற்று சாலை சீரமைப்பு பணிகள் தொடங்கின. புதூரில் பூமிபூஜை நடத்தி மேயர் தேன்மொழி தொடங்கி வைத்தார்.
தலைமை பொறியாளர் சக்திவேல் கூறும்போது "பாதாள சாக்கடை குழாய் பதித்தல், வைகை குடிநீர் திட்ட குழாய் பதித்தல் போன்ற பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகள் உள்பட மிக மோசமான சாலைகள் இந்த திட்டத்தின் மூலம் புதுப்பிக்கப்படுகின்றன. சில இடங்களில் கான்கரீட் சாலை அமைக்கப்படுகிறது. அனைத்து பணிகளும் 3மாதங்களில் முடிக்கப்படும், என்றார். இதில் வடக்கு மண்டல தலைவர் இசக்கிமுத்து மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
நெடுஞ்சாலைத்துறை பொறுப்பிலுள்ள மாட்டுத்தாவணி பிரதான சாலையில் மைய தடுப்பு அமைக்கப்பட்டதால், அதன் அகலம் குறைந்துள்ளது. எனவே சாலையின் இருபுறமும் அகலப்படுத்தி சீரமைக்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது.
துப்புரவு பணி அவசியம்
மதுரை நகரில் பஸ் போக்குவரத்துள்ள சாலைகள், முக்கிய வீதிகள், குடியிருப்புள்ள தெருக்கள், சந்துகள் என மொத்தம் 615 கி.மீ. நீளத்துக்கு சாலைகள் உள்ளன. மாநகராட்சி பொறுப்பிலுள்ள 581 கிமீ சாலைகளில் 114 கிமீ சாலை மட்டுமே புதுப்பிக்கப்படுகிறது. 467 கிமீ நீளத்துக்கு தெருக்களில் சாலைகள் படுமோசமான நிலையில் உள்ளன.மழை ஓய்ந்தும் மதுரையில் புழுதி புயல் ஓயவில்லை. முக்கிய சாலைகளில் பஸ் மற்றும் வாகனங்கள் சென்றதும் அதன் பின்னால் புழுதி கிளம்பி வீசுவது பலரையும் பாதிக்கிறது. புழுதியை போக்க மாநகராட்சி தீவிர துப்புரவு பணி மேற்கொள்ள வேண்டும் என்பதே மக்கள் எதிர்பார்ப்பாகும்.
மதுரை மாட்டுத்தாவணி மெயின்ரோடு அகலப்படுத்தும் பணி வேகமாக நடந்து வருகிறது.