தினமலர் 22.12.2010
மழையால் சேதமான சாலைகள்சீரமைக்க ரூ.40 லட்சம் ஒதுக்கீடு
ஆலந்தூர்:மழையால் சேதமடைந்த, மாநகர பஸ்கள் போக்குவரத்து மிகுந்த சாலைகளை சீரமைக்க ஆலந்தூர் நகராட்சிக்கு வெள்ள நிவாரண நிதியிலிருந்து 40 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.ஆலந்தூர் நகராட்சிக்கு உட்பட்ட, மாநகர பஸ்கள் செல்லும் சாலைகள் மட்டுமின்றி இணைப்பு தெருக்கள் சமீபத்தில் பெய்த தொடர் மழையால் பலத்த சேதமடைந்தது.படுமோசமான சாலைகளில் வாகனங்கள் இயக்க முடியாமல் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும்படி, பொதுமக்கள் சார்பில் ஆலந்தூர் நகராட்சி தலைவர் துரைவேலுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. பழுதான சாலைகள் குறித்து நகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அதில், 40 சாலைகள் படுமோசமாக இருந்தது தெரிந்தது.இதையடுத்து, தமிழக அரசின் வெள்ள நிவாரண நிதியிலிருந்து, மழையால் சேதமடைந்த மாநகர பஸ்கள் போக்குவரத்து மிகுந்த சாலைகளை சீரமைக்க ஆலந்தூர் நகராட்சிக்கு 40 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.இதைத் தொடர்ந்து, ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு, விரைவில் பணிகள் துவங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.