தினகரன் 03.01.2011
அம்பத்தூர் நகராட்சியில் சாலை சீரமைக்க ரூ. 6.5 கோடி நிதி
ஆவடி, ஜன. 3:
அம்பத்தூர் நகராட்சி கூட்டம், தலைவர் சேகர் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் நீலகண்டன், பொறியாளர் ரவி, நகரமைப்பு அலுவலர் கோபால் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், மண்ணூர் பேட்டையில் உடற்பயிற்சி கூடம் கட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தும் பணி தொடங்கவில்லை, சுடுகாடுகளில் கட்டண வசூலை முறைப்படுத்த வேண்டும், நாய் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை மற்றும் பாடிக்குப்பம் பிரதான சாலையில் தரைப்பாலத்தை மேம்பாலமாக்க வேண்டும் என உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
பிறகு, தலைவர் சேகர் கூறுகையில், நகரில் சோடியம் விளக்குகள் பொருத்த ரூ. 30 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தெரு விளக்குகளுக்கு ரூ. 29 லட்சம், நகராட்சி பள்ளிகளுக்கு கூடுதல் கட்டிடம் ரூ. 34.5 லட்சம், மழைநீர் வடிகால்வாய் கட்ட ரூ. 83 லட்சத்து 5,000ம், தார்சாலை அமைக்க ரூ. 20 லட்சம், பூங்கா சீரமைப்புக்கு ரூ. 20 லட்சம், மழையில் சேதமடைந்த சாலையை சீரமைக்க ரூ. 6.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.