தினமணி 26.07.2012
கும்பகோணத்தில் சாலைப் பணி: நகர்மன்ற தலைவர் ஆய்வு
தஞ்சாவூர், ஜூலை 25: தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் நகரில் ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சி இயக்கம் சார்பில் மேற்கொள்ளப்படும் சாலைப் பணியை நகர்மன்றத் தலைவர் ரத்னா சேகர் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார்.
கும்பகோணம் நகராட்சியில் ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சி இயக்கம் 2011 - 2012 திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் சாலை மேம்பாட்டுப் பணியில் ரூ. 8 லட்சம் மதிப்பில் தார்ச் சாலை அமைக்கப்பட்டு வருகிறது.
இந்தப் பணியை நகர்மன்றத் தலைவர் ரத்னா சேகர் செவ்வாய்க்கிழமை நேரில் பார்வையிட்டு, சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.
அப்போது, அவருடன் நகராட்சிப் பொறியாளர் பாண்டுரெங்கன், நகர்மன்ற உறுப்பினர் ராஜூ, நகர அதிமுக முன்னாள் செயலர் பி.எஸ். மனோகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.