தினமலர் 03.08.2012
80 அடி ரோடு வழக்கில் மாநகராட்சி இணைகிறது!
ஈரோடு: போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, 80 அடி சாலையை அமைக்க வேண்டியுள்ளதால், உச்சநீதிமன்ற இடைக்கால தடை வழக்கில், மாவட்ட நிர்வாகத்துடன் தங்களையும் பிரதி வாதியாக இணைக்க, மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.ஈரோடு மாநகராட்சியில், உள்ளூர் திட்டக்குழுமம் பகுதி விரிவு அபிவிருத்தி திட்டம் எண்.2ல், பிரப்ரோடு மற்றும் ரயில்வே ஸ்டேஷனை இணைக்கும் வகையில், சி.எஸ்.ஐ., பள்ளி வளாகம், சிதம்பரம் காலனி, பெரியார் நகர், பெரும்பள்ளம் ஓடை, கரிமேடு மற்றும் சவானா ஹோட்டல் வளாகம் வழியாக, 80 அடி ரோடு சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது.
மேற்படி திட்ட சாலை அமைந்துள்ள, விரிவு அபிவிருத்தி திட்டம் எண்-2, நகர் ஊரமைப்பு துணை ஆணையரால் இணக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. நகர் ஊரமைப்பு ஆணையாளரிடம் இருந்து மேற்படி திட்டத்துக்கு இறுதி ஒப்புதல் பெறும் பொருட்டு, விரிவு அபிவிருத்தி திட்ட விதிகள்-13ன் படி அறிக்கை செய்யப்பட்டது.தமிழ்நாடு அரசிதழ் எண்-27, ஈரோடு விரிவு அபிவிருத்தி திட்டம் எண்-2, தயாரிப்பது தொடர்பான மேற்படி அறிக்கையை தடைசெய்ய, சி.எஸ்.ஐ., நிர்வாகம், சென்னை உயர்நீதிமன்றத்தில், மாவட்ட கலெக்டர், உள்ளூர் திட்டக் குழுமம் உறுப்பினர் செயலர் ஆகியோரை பிரதிவாதியாக சேர்த்து, இடைக்காலை தடை உத்தரவை பெற்று, வழக்கு நடந்து வருகிறது.
நகரில் பி.எஸ்., பார்க் பகுதியில் ஏற்படும் கடுமையான போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, பிரப் ரோடு, ரயில்வே ஸ்டேஷன் இடையிலான, 80 அடி அகல் சாலை அமைக்க, அரசுக்கு சொந்தமாக இருக்கும் இடங்களையும், ஆக்கிரமிப்பு இடங்களையும், தனியாருக்கு சொந்தமான இடங்களையும் இணைத்து, சாலை அமைத்து, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரவேண்டி உள்ளது.
எனவே, நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில், பிரதிவாதியாக, மாநகராட்சியையும் இணைத்துக் கொள்ளவும், தொடர் நடவடிக்கை மேற்கொள்ளவும் மன்றம் ஒப்புதல் அளித்தது.தவிர, 80 அடி அகல ரோடு அமைப்பது குறித்து, மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு மையமும் வலியுறுத்தி உள்ளத. சாலை அமைப்பத தொடர்பான பிரச்னைகளை களைந்து, போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், 80 அடி அகல சாலை அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் விரும்புகின்றனர்.