தினமணி 15.08.2012
குடந்தையில் பிளாஸ்டிக் கலவையுடன் தார் சாலை
தஞ்சாவூர், ஆக. 14: கும்பகோணத்தில் பிளாஸ்டிக் கலவையுடன் கூடிய தார் சாலை அமைக்கப்பட்டு வருகிறது என்றார் கும்பகோணம் நகர்மன்றத் தலைவர் ரத்னா சேகர்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் சேம்பர் ஆப் காமர்ஸ் சார்பில் திங்கள்கிழமை நடைபெற்ற சிட்டி யூனியன் வங்கி அச்சிட்டு வழங்கிய சுத்தம் காப்போம் சுகாதாரம் காணுவோம் விழிப்புணர்வு இலவச கையேடு வெளியீட்டு விழாவில் அவர் மேலும் பேசியது:
கும்பகோணம் தமிழகத்திலியே முதன்மை நகராட்சியாக மாற்றப்பட்டு வருகிறது. நகரில் உள்ள பழைய தார் சாலைகளுக்குப் பதிலாக தரமான தார் சாலைகள், சிமென்ட் சாலைகளாக அமைக்கப்பட்டு வருகின்றன. மேலும், பிளாஸ்டிக் கலவையைக் கொண்டு சாலைகள் அமைக்கப்படுகின்றன. இதற்கு குடந்தை நகர மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.
விழாவுக்கு சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் சந்திரபிரபு தலைமை வகித்தார். சிட்டி யூனியன் வங்கி துணைப் பொது மேலாளர் ஸ்ரீதர், காவல் துணைக் கண்காணிப்பாளர் சிவ. பாஸ்கர், சேம்பர் ஆப் காமர்ஸ் செயலர் சண்முகம், துணைத் தலைவர் ராஜமகேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தேவிகாராணி வரவேற்றார். உமா நன்றி கூறினார்.