தினமணி 05.09.2012
ஓசூர் சாலையை அகலப்படுத்தும் பணி தொடக்கம்: மேயர் வெங்கடேஷ்மூர்த்தி
பெங்களூர், செப். 4:அதிகாரிகளின் கவனக்குறைவால் தடைப்பட்டிருந்த ஓசூர்சாலை இடையிலான சாலை வளர்ச்சிப் பணிகள் வியாழக்கிழமை முதல் தொடங்கப்படும் என்று மேயர் வெங்கடேஷ்மூர்த்தி தெரிவித்தார்.
செவ்வாய்க்கிழமை காலை ஓசூர்சாலையை துணை மேயர் எல்.ஸ்ரீனிவாஸ், ஆளும்கட்சித்தலைவர் என்.நாகராஜ் மற்றும் ஆணையர் ரஜனீஷ்கோயல் ஆகியோருடன் ஆய்வுசெய்த பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: கடந்த 2 ஆண்டுகளாக டெய்ரி சதுக்கத்திலிருந்து மடிவாளா இடையிலான ஓசூர் சாலை அகலப்படுத்தும் பணி அதிகரிகாரிகளின் கவனக்குறைவால் தடைபட்டிருந்தது உண்மை. சாலையை அகலப்படுத்தும் பணி வியாழக்கிழமை முதல் தொடர்ந்து நடைபெறும். சாலையின் இருமருங்கிலும் உள்ள கட்டடங்களை அகற்றுவது தொடர்பாகஅதன் உரிமையாளர்களுக்கு ஏற்கனவே நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அதிகாரிகளின் கவனக்குறைவால் அதன் பின்னர் எந்த ஒரு சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. இதனால் அந்தசாலையில் எந்தவளர்ச்சிப்பணியையும் செய்ய முடியாமல் போனது. ஓசூர் சாலையை அகலப்படுத்தும் பணி தாமதத்திற்கு அதிகாரிகளே பொறுப்பு ஏற்க வேண்டும் என்றார். மேலும் லஷ்கர்-ஓசூர் சாலை இடையே உள்ள பாதையில் மாநகராட்சிக்கு சொந்தமான 47 சொத்துக்கள் உள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இதில் உள்ள கட்டடங்களை அகற்ற ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மற்ற சட்ட நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ளாமல் உள்ளனர். இதற்கு அவர்களிடம் விளக்கம் கேட்கப்படும். ஏற்கனவே போடப்பட்ட லஷ்கர்- ஓசூர்சாலை இடையிலான பாதை உறுதியானதாக இல்லை என்றார் அவர்.