தினமணி 18.02.2013
ஆலம்பாறையில் ரூ. 2.55 கோடியில் பிளாஸ்டிக் தார்ச்சாலைப் பணி தொடக்கம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் வனத்துறை சார்பில் ரூ. 2.55 கோடி மதிப்பிலான பிளாஸ்டிக் தார்ச்சாலை அமைக்கும் பணி சனிக்கிழமை தொடங்கப்பட்டது.
இம்மாவட்டத்தில் வனத் துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை இணைந்து இப் பணியை மேற்கொள்கின்றன.
இதில் ரூ. 1.47 கோடியில் ஆலம்பாறை-மணலோடை-புறாவிளை வழியான 10 கி.மீ. தொலைவு கொண்ட காளிகேசம் சாலையும், ரூ. 1.08 கோடியில் ஆலம்பாறை-பெருஞ்சாணி இடையேயான 7.20 கி.மீ. தொலைவு கொண்ட சாலையும் சீரமைக்கப்படுகின்றன.
இதையொட்டி ஆலம்பாறையில் ஆட்சியர் எஸ். நாகராஜன் தலைமையில் விழா நடைபெற்றது.
சாலைப் பணிகளைத் தொடக்கிவைத்து வனத் துறை அமைச்சர் கே.டி. பச்சைமால் பேசியதாவது:
ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சி தமிழகத்தில் நடைபெறும்போதெல்லாம் மக்களின் அடிப்படைத் தேவைகளான சாலைவசதி, குடிநீர் வசதி போன்ற திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன.
இப்போது முதல்வரின் உத்தரவின் பேரில் வனப் பகுதிகளில் சுற்றுச்சூழல் பாதிக்காதவாறு பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன்படி ஆலம்பாறை-காளிகேசம் சாலை, ஆலம்பாறை பெருஞ்சாணி சாலை ஆகியவை ரூ. 2.55 கோடி மதிப்பீட்டில் பிளாஸ்டிக் தார்ச்சாலையாக செப்பனிடப்படுகின்றன என்றார் அவர்.
மாவட்ட வன அலுவலர் ரிட்டோ சிரியாக், வனப் பொறியாளர் லோகநாதன், வனச் சரகர் தங்கசாமி, வனவர் பிரவிண், காரவிளை செல்வன், திருவட்டாறு ஒன்றியச் செயலர் ஜெயசுதர்சன், துணைச் செயலர் ராஜன்,
மனோகரன், ஆர். முருகன், சக்கீர் உசேன், ஜீன்ஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.