தினகரன் 21.08.2013
திருநீர்மலை லட்சுமிபுரத்தில் புதிய தார்சாலை அமைப்பு
தாம்பரம்: திருநீர்மலை லட்சுமிபுரத்தில் பழைய சாலையை அகற்றி புதிதாக தார் சாலை அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. திருநீர்மலை பேரூராட்சி லட்சுமிபுரத்தில் சேதமடைந்த சந்திரன் நகர் - சிஎல்சி லைன் சாலையை பேரூராட்சி பொது நிதி 8 லட்சத்தில் சீரமைக்க டெண்டர் விடப்பட்டது. புதிதாக தார் சாலை அமைப்பதற்கு முன் சாலையில் தண்ணீர் தேங்கி கிடந்ததை பொருட்படுத்தாமலும், பழைய சாலையை அகற்றாமலும் ஜல்லி கற்கள் கலந்த தார் காலவையை வேகவேகமாக கொட்டி பரப்பினர். தார் கலவை சாலையில் ஒட்டாமல், பெயர்ந்து கொண்டே இருந் தது. இதையும் பொருட்படுத்தாமல் ஒப்பந்ததாரர்கள் தார்சாலை அமைத்து விட்டு சென்றனர்.
முறையாக போடப்படாததால் சாலையில் அப்பகுதி மக்கள் நடந்து செல்லும்போது, கால்களில் தார்கலவை ஒட்டிக்கொள்கிறது. இதனால், அவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார்கள். சில இடங்களில் தார்சாலை போட்டதற்கான அறிகுறியே தெரியவில்லை. சாலை பணிகள் முழுமையானதாக, உரிய தரத்துடன் நடக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர். இதுபற்றி தினகரன் நாளிதழில் கடந்த 18ம் தேதி படத்துடன் செய்தி வெளியானது. இதை தொடர்ந்து அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பகுதியை பார்வையிட்ட னர். இதையடுத்து சேதமடைந்த சாலையை சீரமைக்க முடிவு செய்தனர். பின்னர், நேற்று முதல் அப்பகுதியில் புதிய தார் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.