தினமலர் 24.09.2013
ரூ.3.4 கோடியில் சி.பி.டி.,வளாக சாலை பணி துவக்கம் மாநகராட்சி நடவடிக்கை
தரமணி: தரமணி சி.பி.டி.,வளாகத்தில் உள்ள சாலைகளை சீரமைப்பதற்காக, நேற்று பூமி பூஜை நடந்தது.
தரமணி, கானகம், களிக்குன்றம், பள்ளிப்பட்டு ஆகிய பகுதிகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் பயன்படுத்தும் சி.பி.டி., வளாக நான்காவது சாலை போக்குவரத்திற்கு லாயக்கற்று காணப்பட்டது.
இதுகுறித்து பகுதி வாசிகள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
கடந்த மாதம் ஜனாதிபதி வருகையை முன்னிட்டு, சி.பி.டி.,வளாக மூன்றாவது சாலை மட்டும் அமைக்கப்பட்டது. பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் நான்காவது சாலை கண்டுகொள்ளாமல் விடப்பட்டதால், பகுதிவாசிகள் அதிருப்தியடைந்தனர்.
இதுகுறித்து ‘தினமலர்’ நாளிதழ் படத்துடன் கூடிய விரிவான செய்தியை வெளியிட்டது. செய்தி வெளியான அன்று மாநகராட்சி கமிஷனர் விக்ரம்கபூர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, அவர் கூறுகையில்,‘‘சி.பி.டி., வளாக சாலைகள் அனைத்தும் தொழில்நுட்ப கல்வித்துறை கட்டுப்பாட்டில் உள்ளன. அவற்றை சீரமைக்க அந்த துறையிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது,’’ என்றார்.
ஆனால், அன்றே சி.பி.டி.,வளாக சாலைகள் அமைக்க சம்பந்தப்பட்ட துறை கமிஷனர், மாநகராட்சிக்கு அனுமதியளித்தார். இதையடுத்து, திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு ஒப்பந்தம் கோரப்பட்டது.
இந்த நிலையில், சி.பி.டி., நகரில் உள்ள சாலைகள் அனைத்தும் எட்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டு 3.4 கோடி ரூபாய் மதிப்பில் சாலைகள் அமைப்பதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் மேயர் சைதை துரைசாமி, எம்.எல்.ஏ., அசோக், மண்டலக் குழு தலைவர் முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.