தினமலர் 01.10.2013
ரூ.2,350 கோடியில் 18,264 உட்புற சாலைகள் சீரமைப்பு அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள் முடிக்க திட்டம்
சென்னை:மாநகராட்சி வரலாற்றில், இதுவரை இல்லாத வகையில், இந்த நிதியாண்டில், 2,350 கோடி ரூபாய் செலவில், 18 ஆயிரத்து, 264 உட்புற சாலைகள் புதுப்பிக்கப்பட உள்ளன. இந்த பணிகள், அடுத்த ஆண்டு மே மாதம் முடியும், என, மாநகராட்சி கூட்டத்தில், மேயர் சைதை துரைசாமி அறிவித்தார்.இது தொடர்பாக மாநகராட்சி கூட்டத்தில், அவர் வெளியிட்ட அறிவிப்பு:
சென்னை மாநகராட்சியில் உள்ள, மொத்த உட்புற சாலைகள், 30 ஆயிரத்து, 560. தற்போது, நல்ல நிலையில் உள்ள சாலைகள், 12 ஆயிரத்து, 296. சிதிலமடைந்த சாலைகள், 18 ஆயிரத்து 264.இந்த சிதிலமான சாலைகள், இந்த நிதியாண்டில், மெகா சிட்டி 1 சேமிப்பு நிதி, மெகா சிட்டி 2, மெகா சிட்டி 3, மாநகராட்சி மூலதன நிதி ஆகியவை மூலம்சீரமைக்கப்பட உள்ளன.முதல் கட்டமாக, 8,146 சாலைகள், 1,150 கோடி ரூபாய் செலவில் சீரமைக்கப்படும். இந்த பணிகள், வரும் ஜனவரிக்குள் முடியும்.மீதமுள்ள, 10 ஆயிரத்து, 118 சாலைகள், 1,200 கோடி ரூபாய் செலவில் சீரமைக்க, சம்பந்தப்பட்ட மண்டல அலுவலர்கள் மூலம் மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.டிசம்பர் இறுதிக்குள் இதற்கு ஒப்பந்தம் கோரப்பட்டு, பணி ஆணை வழங்கப்படும். அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள் பணிகள் முடியும். இதன் மூலம் சென்னையில் ஓட்டையான சாலைகள் எங்கும் இருக்காது.இவ்வாறு மேயர் அறிவித்தார்.