தினமணி 08.10.2013
நவீன கான்கிரீட் கலவை மூலம் மாதிரி சாலை அமைப்பு
சாலை அமைத்து 24 மணி நேரத்தில் போக்குவரத்தை அனுமதிக்கும் வகையிலான மாதிரி கான்கிரீட் சாலைப் பணிகள் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை சி.ஐ.டி நகர் ரவுண்டானாவில் இருந்து அண்ணா சாலையை வரையிலான லிங்க் சாலையில், சாலை அமைத்து 24 மணிநேரத்தில் போக்குவரத்தை அனுமதிக்கும் வகையில் எம்95 கான்கிரீட் மாதிரி சாலை அமைக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கப்பட்டது. இதனை மேயர் சைதை துரைசாமி மற்றும் ஆணையர் விக்ரம் கபூர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
மாநகராட்சியில் 170 கி.மீ. நீளத்துக்கு ரூ. 175 கோடி மதிப்பில் 1,120 கான்கிரீட் சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. சாலைகள் அமைக்கப்பட்டு 72 மணி நேரத்தில் போக்குவரத்தை அனுமதிக்கும் வகையிலான எம்40 வகை கான்கிரீட் கலவை இதற்கு பயன்படுத்தப்படுகின்றன.
இப்போது எம்95 வகை கான்கிரீட் கலவை மூலம் மாதிரி சாலை அமைக்கப்படுகிறது. இந்த மாதிரி சாலை அமைக்கும் பணி தொடக்க நிகழ்ச்சியில் துணை மேயர் பா. பெஞ்சமின், சட்டப்பேரவை உறுப்பினர்கள் வி.பி. கலைராஜன், ஜி. செந்தமிழன், இணை ஆணையர் (பணிகள்) விஜய் பிங்ளே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.