தினமலர் 08.10.2013
சி.பி.டி., வளாக சாலை பணி 3.4 கோடி ரூபாயில் துவக்கம்
தரமணி : தரமணி, சி.பி.டி., வளாக சாலை, பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் இருந்தது குறித்து. இந்த நிலையில், 3.4 கோடி ரூபாய் செலவில், சாலைகளை சீரமைக்கும் பணி நேற்று துவங்கியது.
தரமணி, கானகம், களிக்குன்றம், பள்ளிப்பட்டு பகுதிவாசிகள் பயன்படுத்தும் சி.பி.டி., வளாக சாலை, போக்குவரத்திற்கு லாயக்கற்று காணப்பட்டது. இது குறித்து, அந்த பகுதிவாசிகள், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பல முறை புகார் கொடுத்தும், நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்த நிலையில், ஜனாதிபதி வருகையையொட்டி, கடந்த மாதம், சி.பி.டி., வளாகத்தின், மூன்றாவது சாலை மட்டும் சீரமைக்கப்பட்டது. ஆனால், பிரதான சாலை சீரமைக்கப்படாததால், அந்த பகுதிவாசிகள் அதிருப்தி அடைந்தனர். இதை அடுத்து, மாநகராட்சி சார்பில், திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, ஒப்பந்தம் கோரப்பட்டது.
இந்த நிலையில், சி.பி.டி., நகரில் உள்ள சாலைகள் அனைத்தும், எட்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டு, 3.4 கோடி ரூபாய் செலவில் சீரமைக்கும் பணிகள் நேற்று துவங்கின.
தங்களின் பல ஆண்டுகால கோரிக்கை, தினமலர் நாளிதழ் செய்தி மூலம் நிறைவேறிய மகிழ்ச்சியில், கானகம் வைகை காலனி நலச்சங்கத்தினர் மற்றும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள், தினமலர் நாளிதழுக்கு நன்றி தெரிவித்து, பதாகைகள் வைத்துள்ளனர்.