தினமலர் 21.11.2013
சாலை மேம்படுத்தும் பணி: அமைச்சர் துவக்கி வைப்பு
புதுச்சேரி:பெரம்பை ரோட்டில் இருந்து அரும்பார்த்தபுரம் வரையிலான பிரதான சாலையை மேம்படுத்தும் பணியை அமைச்சர் பன்னீர் செல்வம் துவக்கி வைத்தார்.
உழவர்கரை தொகுதிக்குட்பட்ட பிச்சைவீரன்பட்டு பெரம்பை ரோட்டில் இருந்து அரும்பார்த்தபுரம் வரையிலான பிரதான சாலையை மேம்படுத்த, நகர மற்றும் கிராம அமைப்புத்துறை நிதியிலிருந்து 45 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதே போன்று, அரும்பார்த்தபுரம் திருக்குறளார் நகர் உட்புற வீதிகளில் தார் சாலை அமைக்க 43 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இப்பணிகள் துவக்குவதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது. அமைச்சர் பன்னீர்செல்வம் கலந்து கொண்டு, பணிகளை துவக்கி வைத்தார்.
உழவர்கரை நகராட்சி ஆணையர் அழகிரி, வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஆறுமுகம், செயற்பொறியாளர் குணசேகரன், உதவிப்பொறியாளர் கலியவரதன், இளநிலை பொறியாளர் சிவக்குமார் மற்றும் ராதாகிருஷ்ணன் நகர் தலைவர் குணசேகரன், துணைத் தலைவர் ஞானசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.