மாலை மலர் 10.11.2009
திருச்சி மாநகராட்சி பகுதியில் 20 ஆண்டு க்கு சேதம் அடையாத ரோடுகள் ரூ.100 கோடி செலவில் அமைக்கப்படுகிறது
திருச்சி, நவ.10-
திருச்சியில் பெய்த கனமழை காரணமாக சாலைகள் குண்டும் குழியுமாக மாறிவிட்டது. சமீபத்தில் போடப்பட்ட புதிய சாலைகள் கூட இந்த மழைக்கு தாங்க முடியாமல அரிப்பு ஏற்பட்டு உள்ளது. தரமில்லாமல் போடப்பட்ட இந்த சாலைகளினால் மக்கள் பணம் மழை நீரில் கரைந்து விட்டது.
இந்த நிலை வரும் காலங்களில் ஏற்படாமல் தடுக்க திருச்சி மாநகராட்சி பகுதியில் சர்வதேச தரத்தில் ரூ.100 கோடி செலவில் புதிதாக சாலைகள் போட திட்டமிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று மாநகராட்சி மேயர் சுஜாதா தலைமையில் நடந்தது. கமிஷனர் பால்சாமி மற்றும் சாலைப்பணி ஆலோசகர் டாக்டர் சீனிவாசன், துணை மேலாளர் துரைரகுநாதன், மாநகராட்சி என்ஜினீயர் ராஜாமுகமது , நிர்வாக என்ஜினீயர் சந்திரன், அருணாசலம், கோட்ட தலைவர்கள் பாலமுருகன், குமரேசன், ஜெரோம் ஆரோக்கியராஜ், அறிவுடைநம்பி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் தமிழ்நாடு நகர்புற சாலை உள்கட்டமைப்பு துணை தலைவர் காயத்ரி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசிய தாவது:-
திருச்சி மாநகராட்சி பகுதியில் ரூ.100 கோடி செலவில் நவீன முறையில் சர்வதேச தரத்தில் புதிதாக சாலைகள் அமைக்கப்பட உள்ளது. இந்த சாலைகள் அதிக அகலத்தில் மண் சாலைகள் இல்லாத வகையில் என்டு டூ என்டு ரோடாக அமைக்கப்படும். மேலும் சாலை ஓரங்களில் நவீன நடைபாதைகள் ஒரே மாதிரியான தெருவிளக்குகள் அமைக் கப்படும். இந்த சாலையை அமைப்பவர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு பராமரிக்க வேண்டும்.
மேலும் புதிய சாலை அமைக்கப்பட்ட பிறகு யாரும் எந்த பணிக்காகவும் சாலையை தோண்டாத அளவுக்கு ஏற்பாடு செய்யப்படும். சம்பந்தப்பட்டவர்கள் சாலை போடுவதற்கு முன்பே இதுபோன்ற பணிகளை முடித்து விடவும் முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படும்.
முதல் கட்டமாக பாதாள சாக்கடை பணிகள் முடிவடைந்த பகுதியில் இந்த சாலைகள் போடப்படும். இந்த சாலைகள் 20 வருடம் உழைக்கும் வகையில் சிறந்த தரத்துடன் அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.