தினமணி 14.11.2009
700 கி.மீ. தூரத்திற்கு சாலையை மேம்படுத்த மாநகராட்சி முடிவுமதுரை, நவ. 13: மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் 700 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலைகளை சர்வதேச தரத்தில் மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஆணையர் எஸ். செபாஸ்டின் தெரிவித்தார்.
இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் மேயர் கோ. தேன்மொழி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆணையர் எஸ். செபாஸ்டின், துணை மேயர் பி.எம். மன்னன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், மாநகராட்சிப் பகுதிகளில் சேதமடைந்துள்ள சாலைகளை 700 கி.மீ. தூரத்திற்கு மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இத்திட்டத்துக்கு 50 சதவீதம் அரசும், 50 சதவீதம் மாநகராட்சியும் செலவு செய்ய உள்ளது. இத்தொகை உள்கட்டமைப்பு நிதி நிறுவனத்திடம் இருந்து வட்டியில்லாக் கடனாகப் பெறப்பட உள்ளது. இதற்காகத் திட்ட அறிக்கை தயாரிக்க தொழில்நுட்பக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழு நகர் முழுவதும் சாலைகளின் நிலை குறித்து ஆய்வு நடத்தி, அதன் அடிப்படையில் சாலையை எந்த அளவுக்கு மேம்படுத்த வேண்டும் எனத் திட்டமிட்டு, 9 மாதங்களில் அறிக்கை தயார் செய்யவுள்ளது.
மதுரை நகரில் பாதாளச் சாக்கடை, வைகை 2-வது குடிநீர்த் திட்டம், மின்வாரியம், டெலிபோன் கேபிள் பதித்தல் உள்ளிட்ட சாலையைத் தோண்டும் பணிகளை முன்கூட்டியே முடித்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
சாலை அமைத்து முடித்தபிறகு எந்த ஒரு சேதமும் ஏற்படுத்தவிடாமல் தனியார் நிறுவனம் ஒன்றின் மூலம் கண்காணிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. கூட்டத்தில் மண்டலத் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.