தினமணி 19.12.2009
குமரி மாவட்டத்திலுள்ள 56 பேரூராட்சிகளில் ரூ.17.57 கோடியில் சாலைப் பணிகள்
நாகர்கோவில், டிச.18: கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள 56 பேரூராட்சிகளில் நபார்டு வங்கி நிதியுதவியுடன் ரூ.17.57 கோடி மதிப்பீட்டில் 109 சாலை மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக மாநில சுற்றுலா மற்றும் பதிவுத் துறை அமைச்சர் என். சுரேஷ்ராஜன் தெரிவித்தார்.
கொட்டாரம் பேரூராட்சியில் இலவச டிவி வழங்கும் நிகழ்ச்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் 2582 பயனாளிகளுக்கு இலவச டிவிக்களை வழங்கி அமைச்சர் மேலும் பேசியதாவது:
கன்னியாகுமரி மாவட்டத்தில் இதுவரை 2.70 லட்சம் இலவச டிவிக்கள் ஏறத்தாழ ரூ.65 கோடி செலவில் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. மேலும், 1.79 லட்சம் டிவிக்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கொட்டாரம் பேரூராட்சியில் கடந்த மூன்றரை ஆண்டுகளில் 82 பணிகள் ரூ.2.55 கோடியில் நிறைவேற்றப்பட்டுள்ளன. மாவட்டத்திலுள்ள 56 பேரூராட்சி பகுதிகளில் நபார்டு வங்கி நிதியுதவியுடன் ரூ.17.57 கோடியில் 109 சாலை மேம்பாட்டுப் பணிகள் நிறைவேற்றப்படவுள்ளன. இதில் கொட்டாரம் பேரூராட்சியில் புல்லார்குளம் சாலை, பொட்டல்குளம் குருசடி சாலை மேம்பாட்டு பணிகள் தலா ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ளது என்றார் அமைச்சர்.
விழாவில் அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியத் தலைவர் எம். சோமு, தொலைபேசி ஆலோசனைக் குழு உறுப்பினர் என். தாமரை பாரதி உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். வார்டு உறுப்பினர் செல்வி, பேரூராட்சித் தலைவர்கள் பொன்னம்பெருமாள், அன்பு வாணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கொட்டாரம் பேரூராட்சித் தலைவர் சி. யோபு வரவேற்றார். வட்டாட்சியர் ராமச்சந்திரன் நன்றி கூறினார்.