தினமலர் 31.12.2009
சேலம் மாநகராட்சியில் 7 இடத்தில் ரூ.50 லட்சம் செலவில் தார்ச்சாலை
சேலம்: சேலம் மாநகராட்சி பகுதியில் ஏழு இடங்களில் 50 லட்சம் ரூபாய் செலவில் மண் சாலையை தார்ச்சாலையாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சியின் பல இடங்களில் மண்சாலைகள் தார்சாலைகளாக தரம் உயர்த்தப்பட்டு வருகிறது. தற்போது மாநகராட்சி ஐந்தாவது வார்டுக்குட்பட்ட காயத்திரி நகர் பகுதியில் ஆறு லட்சம் ரூபாய் செலவிலும், எட்டாவது வார்டுக்குட்பட்ட நித்தியா நகர் குறுக்கு தெரு 2 மற்றும் ராமநாதபுரம் குறுக்கு தெரு 2 ஆகிய பகுதியில் 11 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் செலவிலும், ஆறாவது வார்டுக்குட்பட்ட இந்திரா நகர் குறுக்கு தெரு பகுதியில் 18 லட்சம் ரூபாய் செலவிலும், ஒன்பதாவது வார்டுக்குட்பட்ட வெங்கடாசலம் காலனியில் 12 லட்சம் ரூபாய் செலவிலும், 19வது வார்டுக்குட்பட்ட மிட்லண்ட் நகரில் ஏழு லட்சம் ரூபாய் செலவில் பணி மேற்கொள்ளப்படுகிறது.
மேலும், 43வது வார்டுக்குட்பட்ட புதுத்தெரு 1, 2, சன்னியாசி குண்டு மெயின்ரோடு, வள்ளலார் தெரு, இட்டேரி ரோடு ஆகிய பகுதியில் ஐந்து லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவிலும், 50வது வார்டுக்குட்பட்ட எஸ்.கே., கார்டன் குறுக்கு ரோடு முதல் மேட்டு வெள்ளலார் தெரு வரை ஆறு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலும் மண் சாலையை தார்சாலையாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று அதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.