தினமணி 05.01.2010
பேரையூர் புறவழிச் சாலையை சீரமைக்க ரூ.25 லட்சம் ஒதுக்கீடு
பேரையூர், ஜன.4: மதுரை மாவட்டம் பேரையூர் புறவழிச் சாலை ரூ.25 லட்சம் மதிப்பில் சரி செய்யப்பட உள்ளதாக பேரூராட்சித் தலைவர் கே.கே.குருசாமி தெரிவித்தார்.
பேரையூர் நகரில் குறுகிய சாலைகளால் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடியும், விபத்துகளும் ஏற்பட்டு வந்தன. அதை தவிர்க்கும் விதத்தில் முக்குச் சாலையில் இருந்து வத்ராப் சாலை வரை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு புறவழிச் சாலை அமைக்கப்பட்டது.
இதன் பின்னர் நகரில் போக்குவரத்து நெருக்கடி குறைந்தது. ஆனால் இந்த சாலை அமைக்கப்பட்டு 5 ஆண்டுகளுக்கும் மேலாகியும் சாலை சரி செய்யப்படாமல் இருந்தது. இதனால் புறவழிச் சாலையில் குண்டும், குழியுமாக காணப்பட்டன.
எனவே வாகனங்கள் தொடர்ந்து விபத்துக்குள்ளாகி வந்தன. இதைத் தவிர்க்க சாலையை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. தற்போது இந்த சாலையை சரி செய்ய நபார்டு நிதி ரூ.17 லட்சமும், பொது நிதியில் இருந்து ரூ.8 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டு வேலைகள் நடைபெற உள்ளதாகத் தெரிவித்தார்.