தினமலர் 06.01.2010
மாநகராட்சி சாலை மேம்பாடு திட்ட ஆலோசனைக் கூட்டம்
திருச்சி: தமிழ்நாடு நகர்புற சாலை உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் திருச்சி மாநகராட்சியிலுள்ள சாலைகளை மேம்படுத்த அரசு முன்வந்துள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்த டி.ஹெச்.வி., பிரைவேட் லிட்., நிறுவனத்தை கன்சல்டன்ஸியாக நியமனம் செய்து, திட்டத்தின் கீழ் மேற்கொள்ள உள்ள சாலைப் பணிதேர்வு செய்யும் பணி தற்போது நடந்து வருகிறது.இப்பணிகளின் முன்னேற்றம் குறித்து திருச்சி மாநகராட்சி மேயர் சுஜாதா தலைமையில், கமிஷனர் பால்சாமி, துணை மேயர் அன்பழகன் முன்னிலையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மாநகராட்சியிலுள்ள முக்கிய சாலைகள் அனைத்தையும் மேற்படி திட்டத்தில் சேர்க்கவும், எந்தப் பகுதியும் விடுபடாமல் சம்பந்தப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் கருத்துக்களை கேட்டறிந்து பணிகளை தேர்வு செய்து திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து கோட்டத்தலைவர்கள், கவுன்சிலர்கள், அனைத்து கட்சி பிரதிநிதிகளின் கருத்துக்கள் கேட்டறியப்பட்டது.
திட்ட வரைவு விரைவாக தயாரிக்கப்பட்டு, பணிகளை விரைவாக துவங்கி, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என கன்சல்டன்ஸி பிரதிநிதிகளிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது. கூட்டத்தில், நகரப்பொறியாளர் ராஜா முகம்மது, செயற்பொறியாளர்கள் சந்திரன், அருணாச்சலம், உதவி கமிஷனர்கள், கோட்டத்தலைவர்கள் பாலமுருகன், அறிவுடைநம்பி, ஜெரோம் ஆரோக்கியராஜ், குமரேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.