தினமணி 28.01.2010
அருப்புக்கோட்டையில் ரூ. 2 கோடியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி துவக்கம்
அருப்புக்கோட்டை, ஜன. 27: அருப்புக்கோட்டை நகரில் ரூ. 2 கோடியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது.
அருப்புக்கோட்டை நகரில், விருதுநகர் ரோடு, திருச்சுழி ரோடு,கருப்பணசாமி கோயில் ரோடு ஆகியவை சேதமுற்று போக்குவரத்துக்கு இடையூறாக இருந்தது. இதுகுறித்து பல்வேறு தரப்பினரும் புகார் தெரிவித்திருந்தனர்.
கடந்த மாதம் கருப்பணசாமி கோயில் சாலை ரூ. 38 லட்சம் செலவில் அமைக்கப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பாவடி தோப்பிலிருந்து பந்தல்குடி சாலை எம்.எஸ். கார்னர் வரை சுமார் ரூ. 2 கோடியில் கீழ் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்கு அரசு பணம் ஒதுக்கியது.
அதைத் தொடர்ந்து சிமெண்ட் சாலை அமைக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது. பாவடித்தோப்பிலிருந்து எம்.எஸ். கார்னர் வரை சாலை அமைக்கும் பணியை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பார்வையிட்டார்.
பின்னர் அவர் கூறியதாவது: இந்த பாவடிதோப்பு சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்கு அரசு ரூ.2 கோடி நிதி ஒதுக்கி பணி துவக்கப்பட்டுள்ளது. இப் பணி முடிந்து பஸ் போக்குவரத்து தொடங்கிய பின்னர், எம்.எஸ். கார்னரிலிருந்து தேவாங்கர் கல்லூரி வரை சிமெண்ட் சாலை அமைக்கும் பணி துவக்கப்படும்.
அதன் பிறகு, நகரின் முக்கியச் சாலைகளில் பாதாளச் சாக்கடை அமைக்கும் பணி துவங்கப்பட உள்ளது. அதற்கு முன்பாக அருப்புக்கோட்டை நகரில் அனைத்து வார்டு மக்களுக்கும் தாமிரபரணி தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.