தினமலர் 02.02.2010
தென்காசி 10வது வார்டில் சாலைப் பணி தீவிரம்
தென்காசி: தென்காசி மேலப்பாறையடி தெருவில் தார்சாலை அமைக்கும் பணி நடந்தது. தென்காசி நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் பெரும்பாலான ரோடுகள், குண்டும் குழியுமாக காட்சி அளிக்கின்றன. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமங்களுக்கு உட்பட்டு வருகின்றனர். நகராட்சி 10வது வார்டு பகுதியில் முறையான கழிவு நீர் வாறுகால் இல்லாததால் கடந்த 35 ஆண்டுகளாக இப்பகுதி பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். கழிவு நீர் தெருக்களில் ஆங்காங்கே தேங்கி கிடந்து சுகாதார சீர்கேடுகளை ஏற்படுத்தியது. வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு ரோடுகளின் நிலை இருந்தது.
இதுபற்றி தினமலரில் படத்துடன் செய்தி வெளியானது. இதனையடுத்து வார்டு கவுன்சிலர் வேல்விழியும் நகராட்சி நிர்வாகத்திடம் வலியுறுத்தினார். இப்பகுதி பொதுமக்களின் தொடர் வலியுறுத்தல் காரணமாகவும் நகராட்சி நிர்வாகம் 10வது வார்டு பகுதியில் வாறுகால் அமைத்து தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுத்தது. கடந்த சில மாதங்களுக்கு முன் அப்பகுதியில் கான்கிரீட் அமைத்து வாறுகால்கள் அமைக்கப்பட்டது. தற்போது இந்த வார்டில் மேலப்பாறையடி தெருவில் தார் ரோடு அமைக்கும் பணி 5 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் செலவில் நடந்து வருகிறது.