தினமலர் 15.02.2010
திண்டுக்கல்லில் சிதைந்து கிடக்கும் 72 ரோடுகள் துணை முதல்வர் தலையிட்டால் பிரச்னை தீரும்
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் பாதாள சாக்கடை பணி காரணமாக நொறுங்கி கிடக்கும் 72 ரோடுகளை புதுப்பிக்க துணை முதல்வர் கவனம் அவசியம் தேவைப்படுகிறது.திண்டுக்கல்லில் 90 கி.மீ., தூரம் பாதாள சாக்கடை பணிகள் நடந்து வருகின்றன. இதில் 36 கி.மீ., பணிகள் முடிந்துள்ளது.72 ரோடுகள் தோண்டப் பட்டுள்ளன. முக்கியமான ரோடுகளாக இவை அமைந்துள்ளதால் நகரில் போக்குவரத்திற்கு பெரிய அளவில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.டூ வீலர், வாகனங்கள் மட்டுமின்றி பொதுமக்கள் நடந்து கூட செல்ல முடியவில்லை. இந்த ரோடுகளை சீரமைக்க நகராட்சி 21 கோடி ரூபாயில் திட்டம் தயாரித்துள் ளது. தற்போது 14 கி.மீ., நீளம் உள்ள 18 ரோடுகள் 4 கோடி ரூபாய் செலவில் சீரமைக்கப்படுகின்றன.மீதம் உள்ள 54 ரோடுகளை சீரமைக்க நிதி வந்தால் மட்டுமே முடியும் என நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.நிதி வர தாமதம் ஆனால் பொதுமக்களே பெரும் தவிப்பிற்கு உள்ளாகும் நிலை உள்ளது.நகராட்சி நிர்வாகம் இந்த நிதியை பெற் றுத் தர வருவாய்த் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மூலம் துணை முதல்வரிடம் முறையீடு செய்துள்ளது.
துணை முதல்வரும் 21 கோடி ரூபாய் வழங்கலாம் என பரிந்துரை செய்துள்ளார் என நகராட்சி கூறுகிறது.ஆனால் மீதமுள்ள பணம் எப்போது வரும் என்பது குறித்து அதிகாரிகளுக்கே தெரியவில்லை. எனவே தற்போது உள்ள நிலையில் ரோடுகள் சீரமைக்கப்படுமா என பொதுமக்கள் சந்தேகத்தில் உள்ளனர். இந்த சந்தேகத்தை தீர்த்து மக்களின் தவிப்பை போக்கும் வகையில் துணை முதல்வர் நேரடியாக இப்பிரச்னையில் தலையிட்டு நிதியை விரைவாக பெற்று தந்து ரோடுகளை சீரமைத்து மக்களுக்கு நிம்மதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.