தினமலர் 25.02.2010
ரோடு அமைத்தால் ஐந்தாண்டுகள் தோண்டக்கூடாது மாநகராட்சி எச்சரிக்கை
மதுரை:""மாநகராட்சிக்கு சொந்தமான பகுதிகளில் ரோடு அமைக்கப் பட்டால், ஐந்தாண்டுகளுக்கு ரோட்டைத் தோண்டக்கூடாது. ரோட்டின் ஓரத்தில் அமைக்கப்பட்ட சிமென்ட் தொட்டியின் மூலம் வயரிங் பணிகளைச் செய்யலாம்,'' என, மதுரை மாநகராட்சி கமிஷனர் செபாஸ்டின் தெரிவித்தார்.
பேட்டியில் அவர் கூறியதாவது : மாநகராட்சிக்குட்பட்ட பெரியார் பஸ் ஸ்டாண்ட், ராணி மங்கம்மாள் சத்திரம், மேலவெளி வீதி, கான்சா மேட்டுத் தெரு, தமிழ்ச்சங்கம் ரோடு பகுதிகளில் கடந்த பத்தாண்டுகளாக பூட்டிக் கிடந்த 60க்கும் மேற்பட்ட கடைகளுக்கு மாநகராட்சி மூலம் ஏலம் நடத்தப்பட்டது. இதில் 40 கடைகள் ஏலத்தில் எடுக்கப்பட்டன. இதன் மூலம் 50 லட்ச ரூபாய் டெபாசிட் தொகையும், மாதம் இரண்டு லட்ச ரூபாய் மாத வாடகையும் கிடைக்கும். இதுவரை ஒரு லட்சத்து 50 ஆயிரம் வீடுகளுக்கு சொத்துவரி விதிக்கப் பட்டு வந்தது. ருகிறது. வரி செலுத் தாத 10 ஆயிரம் வீடுகள் கண்டுபிடிக் கப்பட்டு, அவர்களுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. இதுதவிர 10ஆயிரம் வீடுகள் வரை வரிசெலுத்தாமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. மொபைல் போன் டவருக்கு புதிதாக வரிநியமனம் செய்து குறைந்தபட்சம் ஐந்து கோடி ரூபாய் வரிவசூல் செய்ய முடிவு செய்யப் பட்டது. மொத்தம் 240 கோடி ரூபாயில் நடைபெறும் 11 கால்வாய் பணிகளில், 40 சதவீதம் பணிகள் முடிந்துள்ளன. டிசம்பர் 2011க்குள் பணிகள் முடிந்துவிடும். மதுரை மாநகராட்சியைச் சுற்றியுள்ள ரோடுகள், மாநகராட்சிக்கு சொந்தமான ரோடுகள் சர்வதேச தரத்துடன் உயர்த்துவதற்காக ஆலோசனைக்குழு நியமிக்கப்பட்டது. இன்னும் ஆறுமாதத்தில் சர்வே முடிந்தவுடன், டெண்டர் கோரப் பட்டு பணிகள் துவங்கும். ரோடு அமைக்கப்பட்டு ஐந்தாண்டுகள் வரை, ரோடு தோண்டக்கூடாது. ரோட்டின் ஓரத்தில் சிமென்ட் பெட்டி அமைக்கப்பட்டு, வயரிங் பணிகள் அதன் மூலம் இணைக்கப்படும். ரோடு தோண்ட வேண்டியதில்லை. கொசுவை ஒழிக்க வீரிய மருந்துகள் தெளிக்கப்படுகின்றன. புதிதாக ஆறு வாகனங்கள் வாங்கப் பட்டுள்ளன. நீர்தேங்கியுள்ள பகுதிகளில் எண்ணெய் உருண்டைகள் கொட்டப்பட்டு, கொசுக்களின் உற்பத்தியை கட்டுப்படுத்தி வருகிறோம்.சென்ட்ரல் மார்க்கெட்டில், தற்போதுள்ள கடைக்காரர்களுக்கு ஒதுக்கப்பட்டது போக, மீதியுள்ள கடைகளுக்கு ஏப்ரல் முதல்வாரத்தில் ஏலம் நடத்தப்படும்.மீனாட்சி கோயில் நிர்வாகம், மாநகராட்சி இணைந்து 46 லட்ச ரூபாய் செலவில், பொற்றாமரை குளத்தில் நிரந்தரமாக நீர்தேக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. தினமும் ஒருலட்சம் கனஅடி தண்ணீர் தேவை படுகிறது. மணலூரிலிருந்து, மீனாட்சி கோயில் அருகிலுள்ள ஜோசப் பூங்காவில் காலியாக தண்ணீர்த்தொட்டியிலிருந்து நிரப்பப் படும். அங்கிருந்து குழாய் மூலம் பொற்றாமரை குளம் நிரப்பப்படும். இவ்வாறு அவர் கூறினார்.தலைமை பொறியாளர் சக்திவேல், உதவி கமிஷனர் (வருவாய்) பாஸ்கரன் உடனிருந்தனர்.