தினமலர் 09.03.2010
ஓவேலி சாலையில் ரூ.40 லட்சத்தில் பணி
கூடலூர் : நீண்ட காலமாக பராமரிப்பின்றி இருந்த கூடலூர் - ஓவேலி சாலை 40 லட்சம் ரூபாய் செலவில் சீரமைக்கப்படுகிறது.கூடலூர் ஓவேலி பேரூராட்சியின் பெரும்பாலான பகுதி பிரிவு 17ன் கீழ் வருவதால், உச்சநீதிமன்ற உத்தரவு படி அப்பகுதியில் அரசு துறை மற்றும் தனியாரின் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இதில், கூடலூர் - ஒவேலி சாலை கடந்த பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் பழுதடைந்துள்ளது. இதனால், இச்சாலையில் வாகனங்கள் சென்று வர முடியாததால், இந்த சாலையை சீரமைக்க அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வந்தனர்.
இந்த சாலையில் பழுதடைந்துள்ள பகுதிகளில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள நெடுஞ்சாலை துறை மூலம் 40 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. கூடலூர் நகராட்சி அலுவலகம் அருகே பிரியும் பகுதியிலிருந்து ஆரூட்டுபாறை வரையில் 10.6 கி.மீ., தூரத்தை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள 20 லட்சம் ரூபாய், சூண்டியிலிருந்து காந்திநகர் மற்றும் பெரிசோலை வரையில் 19 கி.மீ., தூர பராமரிப்பு பணிக்கு 20 லட்சம் ரூபாய் என இரு பிரிவாக பிரித்து டெண்டர் விடப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.