தினமணி 17.03.2010
வரும் நிதியாண்டில் சாலைப் பணிகளுக்கு ரூ.70 கோடி தேவை: ஆட்சியர்
நாகர்கோவில், மார்ச் 16:கன்னியாகுமரி மாவட்டத்தில் வரும் நிதியாண்டில் சாலை ப் பணிகளுக்கு ரூ.70 கோடி ஒதுக்கீடு செய்தால் பல்வேறு திட்டப் பணிகளையும் நிறைவேற்றலாம் என்று ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ தெரிவித்தார்.
மாவட்டத்தில் இரு மழைக் காலம் இருப்பதால் சாலைகள் அமைப்பதில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். கீழமணக்குடியில் நடைபெற்ற கீழமணக்குடி- மேலமணக்குடி இணைப்பு பாலத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவுக்கு தலைமை வகித்து அவர் மேலும் பேசியதாவது:
இப் பகுதி மக்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பு இப்போது நிறைவேறுகிறது. இந்த பாலத்தை அமைக்க வருவாய்த் துறை மூலம் 1.39 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட்டு கடந்த ஜனவரி 11-ம் தேதி நெடுஞ்சாலைத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. இம் மாவட்டத்தில் 2009-2010-ம் ஆண்டுக்கு சாலை மேம்பாட்டு திட்டப் பணிகளுக்கு ரூ.30 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இதில், ரூ.22 கோடியில் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பணிகள் இந்த ஆண்டுக்குள் நிறைவேற்றப்பட்டுவிடும்.
நெடுஞ்சாலைத் துறையில் பொறியாளர், கண்காணிப்பாளர் பணியிடங்கள் பலவும் காலியாக உள்ளது. இந்த பணியிடங்களை நிரப்ப வேண்டும். இதனால் சாலைப் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்படும். மகளிர் சுயஉதவிக் குழுக்கள் கிராம அளவில் கூட்டமைப்புகளை ஏற்படுத்தி பெரிய தொகையை கடனுதவியாகப் பெற்று தொழில் தொடங்குவது பெரிய விஷயம்.
மாவட்டத்தில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் மகளிர் சுயஉதவிக் குழுவினர் அதிக அக்கறை செலுத்த வேண்டும். பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக இம் மாவட்டத்தை மாற்றுவதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றார் ஆட்சியர்.