Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பொட்டல்புதூர் - ரவணசமுத்திரம் ஆற்றுவழி பாதைக்கு ரூ.5 லட்சத்தில் பாலம் : நகராட்சி கூட்டத்தில் தீர்மானம்

Print PDF

தினமலர் 01.04.2010

பொட்டல்புதூர் - ரவணசமுத்திரம் ஆற்றுவழி பாதைக்கு ரூ.5 லட்சத்தில் பாலம் : நகராட்சி கூட்டத்தில் தீர்மானம்

ஆழ்வார்குறிச்சி : சுமார் 20 கிராம மக்களின் நீண்டநாள் கோரிக்கையான பொட்டல்புதூர் - ரவணசமுத்திரம் ஆற்றுவழி பாதைக்கு 5 லட்ச ரூபாய் மதிப்பில் பாலம் அமைத்திட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கடையம் யூனியன் கவுன்சிலர்கள் கூட்டம் யூனியன் கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்திற்கு சேர்மன் செல்வி சங்குகிருஷ்ணன் தலைமை வகித்தார். யூனியன் வைஸ் சேர்மன் செய்யதலி பாத்திமா அமீர்கான், ஆணையாளர் ராஜேந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம பஞ்.,) ஜெயராமன் முன்னிலை வகித்தனர். காந்திராமன் அஜண்டா வாசித்தார்.

கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:

பாண்டியன்: சேர்மன் அறைக்கு 19 ஆயிரத்து 400 ரூபாய்க்கு டேபிள், சேர் தேவையா? அநாவசியமாக செலவு பண்ண வேண்டுமா?

ஆணையாளர்: மற்ற யூனியன் அலுவலகம் சென்று பாருங்கள் எப்படி உள்ளது தெரியுமா, கூட்ட அரங்கிற்குதான் வேண்டாம் என்றீர்கள், சேர்மன் அறையில் நல்ல மேஜை, சேர், வேண்டாமா?

பாண்டியன்: மீன்பாசி குத்தகையில் மறுஏலம் நடத்தி யூனியனுக்கு 2,267 ரூபாய் நிதி சேர்த்த நல்ல விஷயங்கள் எப்போதும் ஆதரிக்கப்படும்.

சேர்மன் : நன்றி. சுமார் 20 கிராம பொதுமக்கள் நலனுக்காக பொட்டல்புதூர் - ரவணசமுத்திரம் ஆற்றுவழி பாதையில் ரூ.5 லட்சம் மதிப்பில் பாலம் அமைக்க கலெக்டர் உத்திரவிட்டுள்ளனர். இந்த தீர்மானங்கள் பற்றி கடும் விவாதம் நடந்தது.

பால்ராஜ்: 5 லட்சம் யார் நிதியில் கொடுப்பது.

ஆணையாளர்: ஒன்றிய பொது நிதியில் இருந்துதான் செய்ய வேண்டும்.

கதிரேசன்: அந்த அந்த பகுதி கவுன்சிலர்கள் நிதியில் செய்யட்டும்.

முருகன்: பொது நிதியில் செய்ய வேண்டாம். கவுன்சிலர் நிதியில் செய்யட்டும்.

ஆணையாளர்: பாலம் இல்லாமல் ஆற்று தண்ணீருக்கு கஷ்டப்பட்டு சைக்கிளை சுமந்து வரும் மக்களை நான் நேரில் பார்த்துள்ளேன்.

பால்ராஜ்: செய்யுங்கள், செய்ய வேண்டாம் என்று கூறவில்லை. கவுன்சிலர் நிதியில் செய்ய வேண்டும்.

கணேசன்: ரவணசமுத்திரம், வீராசமுத்திரம், பொட்டல்புதூர் கவுன்சிலர்கள் நிதியில் செய்யலாமே?

வைஸ் சேர்மன் பாத்திமா அமீர்கான்: பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் எல்லாம் நடத்தினார்கள். கலெக்டரிடம் கேட்டுள்ளார்கள்.

பால்ராஜ்: நீங்கள் பாலம் வேண்டும் என்கிறீர்களா, வேண்டாம் என்கிறீர்களா?

ஆணையாளர்: வேண்டும், வேண்டாம் என்று சொல்வதிற்கு இல்லை. பாலம் அமைக்க வேண்டும்.

புவனேஸ்வரி: பொதுமக்கள் அனைவருக்கும் தேவையான ஒன்று பொதுநிதியில் அமைந்திட கூடாதா?

ஆணையாளர்: நீங்கள் ஒருவரும் நிதி ஒதுக்க வேண்டியதில்லை. யூனியன் பொதுநிதியில் செய்வோம்.

வேலு: அனைவருமே நிதி கொடுத்து விடுவோம். இவ்வாறு நடந்த விவாதத்தில் ரூ.5 லட்சம் மதிப்பில் பாலம் அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பார்த்தசாரதி, இந்திரா, உலகம்மாள், ஊர்நல அலுவலர் வள்ளியம்மாள், ஒன்றிய பொருளாளர் பிரவின் பெனட், மார்கோனி, திருமலைக்குமார், விஜயலெட்சுமி, கணக்கர் (பொறுப்பு) பாலகிருஷ்ணன் உட்பட யூனியன் அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் 20 ஆண்டுகளாக சரிசெய்யப்படாத ராமநதி அணைக்கு செல்லும் ரோட்டை சரி செய்யவேண்டுமென கவுன்சிலர் பாண்டியன், காவூர் முதல் தெற்கு மடத்தூர் வரையுள்ள ரோட்டை சரிசெய்ய கவுன்சிலர் கதிரேசன், கீழக்கடையம் ரயில்வே பீடர் ரோட்டை சரி செய்ய வேண்டுமென கவுன்சிலர் பால்ராஜூம் கோரிக்கை விடுத்தனர்.

Last Updated on Thursday, 01 April 2010 06:46