தினமணி 07.04.2010.
சாலை பாதுகாப்பு பணிகளுக்கு ரூ. 11.84 லட்சம் நிதி ஒதுக்கீடு
தூத்துக்குடி, ஏப். 6: தூத்துக்குடி மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு பணிகளுக்கு ரூ. 11.84 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கோ. பிரகாஷ் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தூத்துக்குடி மாவட்டத்தில் 2009-2010-ம் ஆண்டிற்கு சாலைத் தடுப்பு வேலிகள், வழிகாட்டிப் பலகைகள், ஒளிரும் விளக்குகள் உள்ளிட்ட சாலை பாதுகாப்பு பணிகளுக்காக பல்வேறு மதிப்பீடுகள் பெறப்பட்டு போக்குவரத்து ஆணையருக்கு கருத்துருக்கள் பரிந்துரைக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டது. அதனடிப்படையில் ரூ. 11.84 லட்சம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.
இந்த நிதி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் ஆகியோருக்கு சாலைப் பாதுகாப்பு பணிகளுக்காக பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
46 சாலை தடுப்பு வேலிகள் மற்றும் ஒளிரும் வழிகாட்டி விளக்குகள் உள்பட பல்வேறு சாலை பாதுகாப்பு பணிகளுக்காக ரூ. 9,19,550 மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு வழங்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி நகர பகுதிகளில் ஒளிரும் வழிகாட்டிப் பலகைகள் உள்ளிட்ட சாலை பாதுகாப்பு பணிகளுக்காக மாநகராட்சி ஆணையருக்கு ரூ. 2,64,500 வழங்கப்பட்டுள்ளது. அனைத்து பணிகளையும் 30.6.2010-க்குள் முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.