தினமலர் 17.04.2010
மதுரையில் உலக தரத்தில் சாலைகள் ரூ.பல கோடி மதிப்பீட்டில் அமைகிறது
மதுரை : மதுரை மாநகராட்சி பகுதிகளில் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் உலகத் தரம் வாய்ந்த சாலைகள் அமைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. மேயர் தேன்மொழி தலைமையில், கமிஷனர் எஸ்.செபாஸ்டின், துணை மேயர் மன்னன் முன்னிலையில் கூட்டம் நடந்தது. திட்டம் குறித்து தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு சேவை நிறுவன ஆலோசகர் சீனிவாசன் விளக்கினார்.
அவர் கூறியதாவது: தமிழகத்தில் 11 ஊர்களில் உலகத் தரத்தில் சாலைகள் அமைப்பது தொடர்பாக ஆலோசிக்கப்படுகிறது. இத்திட்டத்திற்கு தமிழக அரசு சார்பில், ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் மதுரையில் மட்டும் 750 கி.மீ., தூரத்திற்கு சாலைகள் மேம்படுத்தப்பட உள்ளன. இச்சாலைகளின் ஓரம் நடைபாதை, விளக்குகள், சுரங்க பாதைகள் அமைக்க சர்வே பணிகள் நடக்கின்றன.
மாநகராட்சியில் முதல் கட்டமாக 42, 63, 64, 65 ஆகிய வார்டுகள், இதற்காக முன்மாதிரியாக தேர்வு செய்யப்பட உள்ளன. தொடர்ந்து மற்ற வார்டுகளுக்கு இப்பணி விரிவுபடுத்தப்படும். வளரும் மக்கள் தொகையை கணக்கில்கொண்டு திட்டம் செயல்படுத்தப்படும். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு சாலைகளை தோண்டும் அவசியம் இல்லாத வகையில், குடிநீர், பாதாள சாக்கடை போன்ற பல்வேறு பணிகள் முடிந்த சாலைகள் தேர்வு செய்யப்படும். இத்திட்டத்தின் கீழ் ஏராளமான மரங்களும் வளர்க்கப்படும். அனைத்து பணிகளும் ஓராண்டுக்குள் முடியும். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் தலைமை பொறியாளர் கே.சக்திவேல், கண்காணிப்பு பொறியாளர் ஆர்.விஜயகுமார், மண்டல தலைவர்கள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.