தினமணி 21.04.2010
தார்ச் சாலை அமைக்கும் பணி ஆய்வு
பெரம்பலூர், ஏப். 20: பெரம்பலூர் 15-வது வார்டு பகுதியில் ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார்ச் சாலை அமைக்கும் பணியை பெரம்பலூர் நகராட்சித் தலைவர் எம்.என். ராஜா செவ்வாய்க்கிழமை பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
பெரம்பலூர் நகராட்சிக்குள்பட்ட 21 வார்டுகளிலும் ரூ.23.4 கோடி மதிப்பீட்டில் புதைச் சாக்கடைத் திட்டம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இதில் இத் திட்டம் நிறைவடைந்த பகுதிகளில் புதிய தார்ச் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதனிடையே, 15-வது வார்டு பகுதிக்குள்பட்ட கம்பன் நகர், தம்பி நகர், மண் ஒட்டர்தெரு, மேட்டுத்தெரு, ராம் தியேட்டர் எதிர்புறம் உள்ளிட்ட பகுதிகளில் ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார்த் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்தப் பணியை நகராட்சித் தலைவர் எம்.என். ராஜா பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
பெரம்பலூர் நகராட்சிப் பகுதியில் 95 சதம் புதைச் சாக்கடைத் திட்டப் பணிகள் முடிவடைந்துள்ளன. விரைவில் அத் திட்டம் முழுமை பெறும். இப் பணிகள் முடிவடைந்த பகுதிகளில் புதிய தார்ச் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
ஒருசில பகுதிகளில் புதைச் சாக்கடை திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. அந்தப் பணிகள் நிறைவடைந்தவுடன், அப் பகுதிகளில் தார்ச் சாலை அமைக்கப்படும் என்றார் அவர்.
இந்த ஆய்வின் போது, நகராட்சிப் பொறியாளர் மணிமாறன், பணி மேற்பார்வையாளர் கார்த்திக் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.