தினமணி 30.04.2010
பெரம்பலூர்-அரியலூர்-தஞ்சை சாலையை சீரமைக்க ரூ. 52 கோடி ஒதுக்கீடு
அரியலூர், ஏப். 29: அபெரம்பலூர்-அரியலூர்- தஞ்சை சாலையை சீரமைக்க ரூ.52 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார் அரியலூர் சட்டப்பேரவை உறுப்பினர் பாளை. து. அமரமூர்த்தி.
அரியலூர் நகராட்சியின் 12 வது வார்டுக்குள்பட்ட பகுதியில் அண்மையில் நடைபெற்ற இலவச கலர் டி.வி.க்கள் வழங்கும் விழாவில் அவர் மேலும் பேசியது:
பெரம்பலூரிலிருந்து அரியலூர் வழியாக தஞ்சை செல்லும் மானாமதுரை சாலை அண்மையில் மத்திய அரசால் தேசிய நெடுஞ்சாலையாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அச்சாலை சீரமைக்கப்படாமல் இருந்து வந்தது.
இது தொடர்பாக மத்திய அமைச்சர் ஜி.கே. வாசனிடம் தெரிவித்ததைத் தொடர்ந்து மத்திய தரைவழி போக்குவரத்துத் துறை, மானாமதுரை சாலையில் தஞ்சையிலிருந்து பெரம்பலூர் வரை சீரமைக்க ரூ. 52 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இப்பணி இன்னும் ஒரிரு மாதங்களில் தொடங்கும். அரியலூர் தொகுதியைச் சேர்ந்த 90 ஆயிரம் பேருக்கு இதுவரை இலவச கலர் டி.வி. வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 10 ஆயிரம் பேருக்கும் இன்னும் ஒரு மாதத்தில் இலவச கலர் டிவி வழங்கப்படும் என்றார் அவர்.
விழாவுக்கு நகர்மன்ற உறுப்பினர் தவமணி கோவிந்தன் தலைமை வகித்தார். நகராட்சி துணைத் தலைவர் வி. சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.
விழாவில் நகர பா.ம.க. தலைவர் கோவிந்தன், நகர காங்கிரஸ் தலைவர் எஸ்.ஆர்.ஸ்ரீதர், நகர்மன்ற உறுப்பினர் ஏ.பி.எஸ். பழனிச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக கிராம நிர்வாக அலுவலர் கோவிந்தராஜ் வரவேற்றார். வட்டாட்சியர் (பொ) ஆ. முத்துவடிவேலு நன்றி கூறினார்.