தினகரன் 05.01.2011
மேயர் தகவல் சேதமடைந்த 1320 சாலைகள் 70 நாட்களில் சீரமைக்கப்படும்
சென்னை, ஜன.5:
நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையை சீரமைக்கும் பணியை மேயர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் கூறியதாவது: பருவ மழையால் சென்னையில் 387 கி.மீ. நீளத்திற்கு 1,320 சாலைகள் சேதமடைந்துள்ளன. இவை ரூ. 117 கோடியில் சீரமைக்கப்படுகிறது. மேலும், சிறப்பு சாலைகள் திட்டத்தின் கீழ் சாலைகளை சீரமைக்க முதல்வர் கருணாநிதி ரூ. 60 கோடி நிதி ஒதுக்கியுள்ளார். இதன் மூலம் 146 கி.மீ. நீளத்திற்கு 266 பேருந்து சாலைகள் புதுப்பிக்கப்படுகிறது.
இதற்காக ஒப்பந்தங்கள் கோரி பணிகள் நடக்கிறது. இதுதவிர, மாநகராட்சி நிதியில் இருந்து ரூ. 20 கோடி செலவில் 100 கி.மீ. நீளத்திற்கு உட்புற சாலைகள் சீரமைக்கும் பணியும் நடக்கிறது.
ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ், 400 கி.மீ. நீளத்திற்கு மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்படுகிறது. கடந்த 10 நாட்களில் மட்டும் 25 சாலைகள் ரூ. 1.20 கோடி செலவில் சீரமைக்கப்பட்டுள்ளது.
சாலை சீரமைப்பு பணிகள் 60 அல்லது 70 நாட்களில் முடிக்கப்படும். அதிமுகவை பொறுத்தவரை அவர்கள் நாள்தோறும் பிரச்னைகளை தேடிக்கொண்டு போராட்டம் நடத்துகிறார்கள்.
இவ்வாறு மேயர் கூறினார்.