தினகரன் 09.12.2010
அவனியாபுரம் பகுதியில் சாலைகள் சீரமைப்பு பணி துவக்கம்
அவனியாபுரம், டிச.9: அவனியாபுரம் பகுதியில் மழையால் பாதித்த சாலைகளை சீரமைக்கும் பணி தொடங்கியது. அவனியாபுரம் நகராட்சிக்கு உட்பட்ட சாலைகளை சீரமைக்க, தமிழ்நாடு அரசு, சிறப்பு சாலைகள் திட்டத்தின் கீழ் ரூ.5 கோடி நிதி ஒதுக்கியது. இதையடுத்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 14 கி.மீ. சாலைகள் நகராட்சி சார்பில் மதிப்பீடு செய்யப்பட்டது. வில்லாபுரம் வீட்டு வசதி குடியிருப்பு, திருப்பதி நகர், பெரியசாமி நகர், காமராஜ் நகர், அவனியாபுரம் ஆகிய பகுதிகள் உள்பட 14 கி.மீ. சாலைகள் செப்பனிட திட்டமிடப்பட்டது.
நேற்று காலை வில்லாபுரம் வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு பகுதியில் முதல் கட்டப்பணியாக பூஜை நடந்தது. நகராட்சி தலைவர் போஸ் முத்தையா, துணைத் தலைவர் கருப்பசாமி, நகராட்சி செயல் அலுவலர் ஞானசேகரன், பொறியாளர் கோமதி சங்கர், கவுன்சிலர்கள் ராமசாமி, பாலகிருஷ்ணன், செந்தில், நகராட்சி தனி மேற்பார்வையாளர் மதுசூதனன், ஆய்வாளர் ஆசைத்தம்பி பங்கேற்றனர்.