தினமலர் 26.10.2010
மத்திய இணையமைச்சர் தகவல் : சாலை புதுப்பிக்க 1,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு
நாமக்கல்: ""தமிழகம் முழுவதும் உள்ள நகராட்சி, டவுன் பஞ்சாயத்து சாலைகளை புதுப்பிக்க, 1,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது,'' என, காஸ் அடுப்பு வழங்கும் விழாவில் மத்திய இணையமைச்சர் காந்திசெல்வன் பேசினார்.
ஆலாம்பாளையம் டவுன் பஞ்சாயத்து சின்னாக்கவுண்டம்பாளையத்தில் இலவச காஸ் இணைப்புடன் கூடிய அடுப்பு வழங்கும் விழா நடந்தது. தேர்வு செய்யப்பட்ட 496 பயனாளிகளுக்கு இலவச காஸ் இணைப்புடன் கூடிய அடுப்பு வழங்கி மத்திய இணையமைச்சர் காந்திசெல்வன் பேசியதாவது: தமிழகம் முழுவதும் உள்ள நகராட்சி, டவுன் பஞ்சாயத்து சாலைகள் புதுப்பிக்க, 1,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆலாம்பாளையம் டவுன் பஞ்சாயத்தில் மட்டும் 6 சாலைப்பணிகள் மேற்கொள்ள 82 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சின்னாக்கவுண்டம்பாளையத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் ஒரு கோடியே 14 லட்சம் ரூபாய் மதிப்பில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இப்பகுதியில் கழிப்பிட வசதி விரைந்து நிறைவேற்றப்படும். இதுவரை 1 கோடியே 51 லட்சம் ரூபாய் மதிப்பில் 64 ஆயிரத்து 820 இலவச காஸ் இணைப்புடன் கூடிய அடுப்பு வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் காஸ் இணைப்பு வழங்கப்படாத பகுதிக்கு விரைந்து காஸ் அடுப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
மேலும், மாவட்ட வழங்கல் அலுவலர் பெருமாள், டவுன் பஞ்சாயத்து தலைவர் யுவராஜ், நகராட்சி சேர்மன் குமார், தாசில்தார் சேகர், மாவட்ட கவுன்சிலர் சுப்பிரமணியம், நடனசபாபதி உட்பட பலர் பங்கேற்றனர்.