தினகரன் 23.09.2010
மேவளூர்குப்பம் & நயப்பாக்கம் சாலையை சீரமைக்க ரூ4 கோடி
ஸ்ரீபெரும்புதூர்,செப்.23: மேவளூர்குப்பம்&நயப்பாக்கம் சாலை மற்றும் பாலங்களை சீரமைக்க ரூ.4 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான பணி அடுத்த மாதம் தொடங்கப்படும் என சென்னை பெருநகர வளர்ச்சி குழும அதிகாரி தெரிவித்துள்ளார்.
தண்டலம்&பேரம்பாக்கம் சாலையை இணைக்கும் மேவளூர்குப்பம் & நயப்பாக்கம் சாலை 10 ஆண்டுகளுக்கும் மேலாக குண்டும், குழியுமாக இருக்கிறது. இதையடுத்து, மேவளூர்குப்பம் தரைப்பாலம் மற்றும் நயப்பாக்கம் சாலையை சீரமைக்க வேண்டும் என ஊராட்சி தலைவர் கோபால் தலைமையில் கிராம மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
கோரிக்கை ஏற்று 4.4 கிலோ மீட்டர் நீளமுள்ள மேவளூர்குப்பம்&நயப்பாக்கம் சாலையை சீரமைக்க ரூ4கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சென்னை பெருநகர வளர்ச்சி குழும அதிகாரி ஞானசேகர் கூறுகையில், ‘மேவளூர்குப்பம்&நயப்பாக்கம் ஒரு வழிச்சாலையை இரு வழிச்சாலை யாக அகலப்படுத்தி சீரமைக்கவும், அங்குள்ள 2 பாலங்களை சீரமைக்கவும், மழைநீர் வடிகால்வாய் கட்டவும் ரூ4கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பணிகள் விரைவில் தொடங்கும்’ என்றார்.