தினமலர் 21.09.2010
நகர சாலைகளை புதுப்பிக்க ரூ.4.04 கோடி : குன்னூர் நகராட்சித் தலைவர் தகவல்
குன்னூர் : "குன்னூரில் உள்ள சாலைகளை புதுப்பிக்க, மாநில அரசு 4.04 கோடி ஒதுக்கியுள்ளது; சாலையின் ஆயுட்காலத்தை நீடிக்க "இன்டர்லாக் பிளாக்' கற்கள் பதிக்க திட்டமிடப்பட்டுள்ளது' என, குன்னூர் நகராட்சித் தலைவர் ராமசாமி கூறினார்.
மாநிலத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் உள்ள தரமற்ற சாலைகளைப் புதுப்பிக்க, 1,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என, சமீபத்தில், மாநில முதல்வர் கருணாநிதி அறிவித்தார். இதனடிப்படையில், மாநிலத்தில் உள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளிடம் திட்ட மதிப்பீடு கோரப்பட்டது; குன்னூர் நகராட்சி சார்பில் பல சாலைப் பணிகள் தேர்வு செய்யப்பட்டு, 7 கோடி ரூபாய் அளவுக்கு திட்ட அறிக்கை வழங்கப்பட்டது; 4 கோடியே 4 லட்சம் ரூபாயை, மாநில அரசு நகராட்சிக்கு வழங்கியுள்ளது. இதற்கான காசோலையை, மாநில துணை முதல்வர் ஸ்டாலின், குன்னூர் நகராட்சித் தலைவர் ராமசாமியிடம் வழங்கினார்.
நகரில் மேற்கொள்ளப்பட உள்ள சாலைப் பணி குறித்து, நகராட்சித் தலைவர் ராமசாமி கூறியதாவது: சாலைப் பணிக்காக, மாநில அரசிடம் 7 கோடி ரூபாய் கேட்டிருந்தோம்; முதற்கட்டமாக 4.04 கோடி ரூபாயை மாநில அரசு வழங்கியுள்ளது. குன்னூர் சிங்காரா சாலை, ஐ.டி.ஐ., அமைந்துள்ள வாக்கர் ஹில் சாலை, மவுண்ட்பிளசன்ட் நீர்தேக்கத் தொட்டி மற்றும் பிரதான சாலை, குயில்ஹில் சாலை, பிருந்தாவன் பள்ளி சாலை உட்பட 5 கி.மீ., தூர சாலைகள் சீரமைக்கப்பட உள்ளன; பணிகள் விரைவில் துவக்கப்படும்.
சாலைகளில் கழிவுநீர், மழைநீர் வெளியேற வசதியில்லாததால் சாலையின் ஆயுட்காலம் குறைந்து விடுகிறது; இத்தகைய இடங்களில் "இன்டர்லாக் பிளாக்' கற்கள் பதிக்கப்படும்; தவிர, சிமென்ட் கான்கிரீட் சாலையும் அமைக்கப்படும். சாலையின் தரமும் அவ்வப்போது கண்காணிக்கப்பட்டு, பல ஆண்டுகளுக்கு சாலைகள் தாக்குப்பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
குன்னூர் நகர மக்களுக்கு தேவையான சாலை, நடைபாதை, தண்ணீர், மின்சாரம் உட்பட அனைத்து அத்தியாவசியப் பணிகளையும் செய்து முடிக்க வேண்டும் என துணை முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்; பணிகளுக்கு தேவையான நிதியை ஒதுக்க பரிந்துரை செய்யவும் தயாராக உள்ளார்.